அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை... வடசென்னை மக்களுக்கு ம.நீ.ம. சார்பில் நிவாரண உதவி
சென்னை: லாக்டவுன் காரணமாக வேலையின்றி, வருமானமின்றி சிரமப்படும் வடசென்னை பகுதி மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான பிரியதர்ஷினி ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார் வழக்கறிஞர் பிரியதர்ஷினி.
தமிழகம் முழுவதும் திமுகவினர் ஏற்கனவே முழு வீச்சில் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யமும் இப்போது அந்த பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் கூட்டம் சேராதவாறு பயனாளிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், இதேபோல் லாக்டவுன் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்படுகிறது.
நிவாரண உதவிகள் புரியும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை ஊக்குவிக்கும் வகையில் கமல்ஹாசனே சில நேரங்களில் நேரடியாக அலைபேசி மூலம் அழைத்து பாராட்டு தெரிவிக்கிறார். மேலும், காவல்துறையினருடன் இணைந்து சென்னையின் பிரதான இடங்களில் உள்ள சாலைகளில் கொரோனா வைரஸ் படத்தை வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவையிலும் மநீமவினர் ஈடுபட்டுள்ளனர்.