இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு
Recommended Video
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களைகளையும், அவர்களது தலைப்பாகைகளையும் தக்கவைத்துக்கொள்வதற்காக ஆட்சியில் இருந்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் தனக்கு பங்கெடுக்க விருப்பமில்லாததால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை எனக் கூறியுள்ளார்.
பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், ஆட்சியில் இருந்து அகற்றி 2021-ல் ஆட்சியை கைப்பற்றும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். பெருவாரி மக்களின் எண்ணப்படி மக்களாட்சிக்கு மக்கள் நீதி மய்யம் வழி வகுத்து வருவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே இடைத்தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில் கமல்ஹாசனும் அதே நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இதனால் களத்தில் திமுக-அதிமுக இடையே தான் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. இதனிடையே நாம் தமிழர்கள் கட்சி தனது இடைத்தேர்தல் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
21 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசன் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது கட்சி போட்டியிடாமல் இருந்திருந்தால் திமுக இன்னும் ஓரிரு இடங்களை அதிகமாக கைப்பற்றி தமிழக அரசியலின் திசையே மாறியிருக்கும்.