ப்ரீபோல் சர்வேயிலும் மக்கள் நீதி மய்யம் அசத்தல்.. 5 பேர் சட்டசபைக்கு போவாங்களாமே.. அதில் கமல் உண்டா?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த 5 பேர் வெல்வார்கள் என டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த 5 பேரில் கமல்ஹாசனும் உண்டா என அவரது தொண்டர்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எழுத்தாளர், நடிகர், பாடலாசிரியர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை கொண்டவர் கமல்ஹாசன். இவர் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் 2017ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் பெரும்பாலான தொகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் நீதி மய்யம்
இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அக்கட்சியின் மொத்த வாக்குகள் 1.61 கோடியை தாண்டியது. மேலும் வாக்கு சதவீதம் 7.1 ஆகும். இதையடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
மக்கள் செல்வாக்கு
இவரது வாக்கு சதவீதத்தையும் மக்கள் செல்வாக்கையும் பார்த்துவிட்டு பெரிய கட்சிகள் கமலுக்கு வலை விரித்தன. ஆனால் அவரோ கழுவுற மீனில் நழுவுற மீன் போல் யாரிடமும் சிக்கவில்லை. கடைசியாக மக்கள் நீதி மய்யம் தலைமையில் சரத்குமார் கட்சியையும், ரவி பச்சமுத்துவின் கட்சியையும் இணைத்துள்ளார்.
5 இடங்கள்
கமல்ஹாசனின் வாக்கு சதவீதம் இந்த முறை அதிகரிக்கும் என்றே தெரிகிறது. அவர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறார். இந்த நிலையில் டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெறும் என கூறுகிறது.
கருத்துக் கணிப்புகள்
கருத்துக் கணிப்புகள் கருத்து திணிப்புகள் என கூறினாலும் மக்கள் நீதி மய்யத்திற்கு இதுவும் ஒரு பெரிய வெற்றிதான் என்கிறார்கள். இந்த 5 பேரில் கமல்ஹாசனும் சட்டசபைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆலந்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.