மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியானது தொழில்துறைக்கான 7 முத்தான உறுதிமொழிகள்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழில்துறைக்கான 7 உறுதிமொழிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதன்கிழமைதோறும் துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் தொழில் துறைக்கான கொள்கைகள் வெளியாகியுள்ளன.
அவை பின்வருமாறு:
1. புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுக்கான துறை:
அறிவியல், தொழில்நுட்பங்கள், புதிய தொழில் முனைதல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து அவற்றை நடைமுறைச் சாத்தியமாக்கிடவும் தொழில்துறை புரட்சி 4.0 க்கு வித்திடுவதற்கு ஏதுவாக புத்தாக்கம் மற்றும் புதிய சாத்தியக் கூறுகளுக்கான துறை எங்கள் அரசால் நிறுவப்படும்.
2. தொழில்துறையுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை:
முதல்வர் தலைமையில் அரசு, "மதியுரைக்குழு" ஒன்றினை நிறுவி, அரசாங்கம்-தொழில்-கல்வி- அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு காலாண்டிலும் "கலந்தாலோசனைக் கூட்டம் " நடத்துவதற்கான முன்னெடுப்புகளைச் செய்யும் எங்கள் அரசு.
3. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) வலுப்படுத்துதல் :
நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க முயற்சிகள் மூலமாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கத்தை எங்கள் அரசு உறுதி செய்யும்.
4. குறைந்த வளர்ச்சியுள்ள பகுதிகளின் மேம்பாடு :
பெரிய தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகள் மற்றும் கிளை அலுவலகங்களை, வளர்ச்சி குறைந்த பகுதிகளில் அமைத்திட ஊக்குவிக்கப்படும். அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி நகர்ப்புறம் நோக்கிய நகர்வுகள் கட்டுப்படுத்தப்படும்.
5. அமைப்புசாரா தொழிலாளர் வலுப்படுத்துதல்:
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு (புலம்பெயர் தொழிலாளர்கள்) துறையில் கட்டாய மற்றும் விரிவான காப்பீடு, ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் வேலை பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவதன் மூலம் அவர்களும் அமைப்புசார் தொழிலாளர்களாக முறைப்படுத்தப்படுவர்.
6. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் திறன் மேம்பாட்டு மய்யங்கள் நிறுவப்படும்:
ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து புதிய திறன் மேம்பாட்டு மய்யங்கள் நிறுவப்படும்.
7. வளர்ச்சிக்கான தொழில்துறை முதலீட்டுத் திட்டம்:
புதிய தொழில் துறை முதலீடுகள் செய்ய முற்படும் பொழுது, முன்மொழிவு செய்வது முதல் அதை செயல்படுத்தும் வரை, முறையான காலக்கெடுவுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவோம். அதன் மூலம் முதலீடு செய்யும் வணிக நிறுவனங்களின் தொழில் மேம்பாடடைய வழிவகை செய்யப்படும்.