கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான 7 உறுதிமொழிகள்.. வெளியிட்டது மநீம!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிக்கான 7 உறுதி மொழிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அக்கட்சியினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கும் 7 உறுதிமொழிகள் பின்வருமாறு:
1. பஞ்சாயத்துகளின் மூன்று அடுக்குகளுக்குமான நிதி திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு.
2. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி, செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கிடைக்கச் செய்தல்.
3. ஆன்லைன் பஞ்சாயத்துகள்: கிராம சபை தீர்மானங்கள்-அவற்றின் தற்போதைய நிலை, மற்றும் ஊராட்சியின் ஒட்டுமொத்த வரவு-செலவு விவரங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் இணையம் மற்றும் செயலியின்(App) வழியாக மக்கள் கண்காணிப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
4. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்வைக்கும் பிரச்சனைகளைப் தீர்த்துவைப்பதற்காக உள்ள தமிழக உள்ளாட்சி முறைமன்ற நடுவத்தின் (Ombudsman) அதிகார வரம்பின் கீழ் கிராமப்புற உள்ளாட்சிகளும் கொண்டுவரப்படும். இது மாநில, மாவட்ட அளவிலான முறைமன்ற நடுவமாக செயல்படும்.
5. உள்ளாட்சிப் பிரதிநிதியை திரும்பப்பெறும் உரிமை:
கிராம சபைகள் வலுவாக்கப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதியை திரும்பப்பெறும் உரிமையானது கிராம சபைகளுக்குக் கொடுக்கப்படும்.
6. உள்ளாட்சி நிர்வாகத்தில் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்காக மாநில அளவில் ஒரு தன்னாட்சி நிறுவனத்தை உருவாக்குதல்.
7. பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கான ஊதியம் வழங்கப்படும் ஆகிய 7 உறுதிமொழிகள் வெளியாகின.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர்ப்புற உள்ளாட்சிக்கான 7 உறுதி மொழிகள்
1. ஒருங்கிணைந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி சட்டம் இயற்றப்படும்.
2. நகர்ப்புற உள்ளூர் தன்னாட்சி அமைப்புகளில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வார்டு குழுக்கள் மற்றும் பகுதி சபைகள் நடைமுறைபடுத்தப்படும்.
3. குடிமக்களுக்கு தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக (ஸ்மார்ட்போன்கள் மூலம்) அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களும் ஆன்லைன் ஆக்கப்படும்.
4. வெள்ளத்தின் தாக்கத்தைத் தடுக்க, குறிப்பாக சென்னையில் இந்த தாக்கத்தைத் தணிப்பதற்கு சிங்கப்பூரில் இருப்பது போன்ற சர்வதேச தரம் வாய்ந்த நிரந்தரத் தீர்வுகள் செயல்படுத்தப்படும்.
5. ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அனைத்து நகர்ப்புற தன்னாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் கட்டாயமாக்கப்படும்.
6. சுத்தமாகவும் பசுமையாகவும் மாற வேண்டும் என்ற சுற்றுச்சூழல் உணர்திறனில் சர்வதேச தரங்களை ஏற்று, குடிமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படும் அனைத்து டவுண் பஞ்சாயத்து, நகராட்சி அல்லது கார்ப்பரேசனும் அரசாங்கத்தால் பெருமளவில் ஆதரிக்கப்படும்.
7. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி சுய நிர்வாக அதிகார வரம்புகளிலும் போக்குவரத்து நிர்வாகத்தில் சர்வதேச தரங்கள் பின்பற்றப்படும் ஆகிய 7 உறுதிமொழிகள் வெளியாகியுள்ளன.