'ஜூன் 28ம் தேதி கிராம சபை' மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு
சென்னை: வரும் ஜூன் 28ம் தேதி தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மே 1ம் தேதி தேர்தலால் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் ஜூன் 28ம் தேதி நடக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கிராம சபை கூட்டங்களில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது. கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்த உடனேயே செய்த விஷயம். மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டத்தை நடத்தி பங்கேற்றார். இந்த சூழலில் தமிழகத்தில் வரும் ஜூன் 28ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தவறாது மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என கமல் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த மே 1 அன்ற நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் காரணமாக த்ள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஜூன்28ம் தேதி நடைபெறவிருபபதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கிராம சபை அமைப்பு பெரிதாக நடைமுறைக்கு வராமல் முடங்கியிருந்த நேரத்தில் நமது மக்கள் நீதி மய்யம் கட்சி அதை செயல்படவைக்கும் முயற்சியை முன்னெடுத்தது.
அதன் வழியில் வரும் ஜூன் 28 தமிழகத்தில் இருக்கும் 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் நடைபெறவிருக்கும் கிராமசபை கூட்டங்களில் இந்த முறையம் நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். அதற்கான நடைமுறையை இப்போதே நிர்வாகக்குழு, செயற்குழு, மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி. களப் பொறுப்பாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கமல் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.