சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த மக்கள் பாதை நிர்வாகிகள்.. வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற போலீஸ்.. வீடியோ
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கம் சென்னை தலைமை அலுவலகத்தில் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மக்கள் பாதை தோழர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாமாக கைது செய்து கொண்டு செல்லப்பட்டனர்.
Recommended Video
சென்னை விருகம்பாக்கத்தில் மக்கள் பாதை இயக்கத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் பாதை இயக்கத்தினர் ஆறு பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களது போராட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல்கட்சியினர் திரையுலகினர் ஆதரவு தெரிவித்தனர், போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட தொடங்கினர்.
கலைந்து செல்லுங்கள்
இதனிடையே மக்கள் பாதை இயக்கத்தினரின் போராட்டம் இன்று 7வது நாளை எட்டிய நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வந்து போராட்டகாரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர்.
மருத்துவமனையில் சேர்ப்பு
ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனை அடுத்து, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பாதை இயக்கத்தினர் 6 பேரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மதுரையிலும் பேராட்டம்
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை இயக்கத்தினர் நெற்குன்றம் லட்சுமி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தர மறுத்து திருமண மண்டபத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதை இயக்கத்தினர் சென்னை மட்டுமின்றி கோவையிலும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மதுரை உள்ளிட்ட தென் மண்டலத்திலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தது.
சாபத்துக்கு ஆளாக வேண்டாம்
இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் மக்கள் பாதை அமைப்பினரை இன்று காலை நேரில் சந்தித்து நடிகர் மயில்சாமி ஆதரவு தெரிவித்தார். பதவி இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்காதீர்கள் என்றும் சாபத்துக்கு ஆளாக வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.