குக்கிராமத்து பாட்டியும் கருவாட்டு குழம்பும்.. நெகிழ்ந்து நினைவு கூர்ந்த எம்ஜிஆர்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 31-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் அவரை பற்றின ஒரு நினைவு துளி இதோ:
4.7.1977 = மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற நாள். அன்றைய தினம் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் எம்ஜிஆரை நேரில் காண அலைமோதுகிறார்கள்.
நாகர்கோவிலைச் சேர்ந்த எம்ஜிஆர் அபிமானிகள் தனி பேருந்தில் புறப்பட்டு சென்னை வருகிறார்கள். ராமாவரம் தோட்ட வாசலில் பேருந்து நிற்கிறது. நாகர்கோவிலிலிருந்து இப்படி வந்திருக்கிறார்கள் என்ற தகவல் எம்ஜிஆரிடம் தெரிவிக்கப்பட்டது.
நல்லா இருக்காங்களா?
உடனடியாக வந்திருந்த அனைவருக்கும் சூடான இட்லியும் கருவாட்டுக் குழம்பும் பறிமாறப்பட்டது. அதற்கு பிறகு வந்திருந்தவர்களிடம் பேச தொடங்கினார் எம்ஜிஆர். அப்போது வயதான பெரியவர் ஒருவரிடம், நாகர்கோவிலுக்கு 3 மைல் தூரத்துக்கு முன்னால் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயரை சொல்லி, அந்த கிராமத்திலிருந்து ஒரு பெண்மணியின் பெயரையும் குறிப்பிட்டு "அந்த அம்மா நல்லா இருக்காங்களா" என்று விசாரிக்கிறார்.
எப்படி தெரியும்?
அதைக் கேட்டதும் அந்த பெரியவர், "ஏதோ இருக்காங்க... ஆனா ரொம்ப வயசாயிடுச்சு... உடம்பு தளர்ந்து போய் கவனிப்பு இல்லாம இருக்காங்க" என்று கவலையுடன் சொன்னார். பிறகு எம்ஜிஆரிடம், "ஆமா.. அந்த அம்மாவை எப்படி உங்களுக்கு தெரியும்?" என்று ஆச்சரியப்பட்டு கேட்டாராம்.
குடிசையில் தங்கினோம்
அதற்கு எம்ஜிஆர், "30 வருஷத்துக்கு முன்னாடி அந்த கிராமத்து வழியா நான் கார்ல போனேன். அப்போ கார் ரிப்பேர் ஆகிப்போச்சு. ராத்திரி 12 மணிக்கு ரிப்பேர் செய்ய அந்த கிராமத்துல யாருமில்லை. அதனால அந்த அந்த அம்மாவோட குடிசையில்தான் ராத்திரி முழுவதும் நானும் என் நண்பனும் தங்கியிருந்தோம்.
கருவாட்டு குழம்பு
அது மட்டுமல்ல, அந்த ராத்திரியில தண்ணி ஊத்தி வைச்ச பழைய சோத்துக்கு சாலக் கருவாட்டை சுட்டு, பசிக்கு சோறு கொடுத்தாங்க, அன்னிக்கு என் பசிக்கு சோறு போட்ட தாயா இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்காங்க? என்று வருத்தப்பட்டாராம் எம்ஜிஆர்!