இந்தியாவுடன் கை கோர்க்கும் 3 நாடுகள்.. இன்று துவங்குகிறது மலபார் பயிற்சி.. செம டென்ஷனில் சீனா
சென்னை: 'மலபார் பயிற்சி'யின் முதல் கட்டம் இன்று வங்கக் கடலில் தொடங்குகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், நிலத்திலும், கடலிலும் சீனா ஆதிக்கம் செலுத்த முயலும் நிலையில், மலபார் பயிற்சி நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது.
மலபார் கடற்படை பயிற்சியில் 13 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா பங்கேற்றுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா நெருக்கம் காட்ட ஆரம்பித்து உள்ளது என்பதற்கான சிக்னலாக இது பார்க்கப்படுகிறது.
சீனாவின் கடல் சார் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஆஸ்திரேலியா. எனவே அது தற்போது இந்தியாவுடன் கைகோர்த்து இருப்பது சீனாவின் கண்களை உறுத்துகிறது.
ராஜீவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியும்: பேரறிவாளன் வழக்கறிஞர்
இந்தியா-ஆஸ்திரேலியா உறவு
லடாக் எல்லையில் சீனா வம்பு இழுத்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவின் நட்பு தேவைப்படுகிறது. 2007ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா, இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை என்ற போதிலும் இந்த விஷயத்தில் இந்தியா மிகவும் முயற்சிகள் எதுவும் செய்யாமல் பொறுமை காத்தது.
13 வருடங்கள் பிறகு
இதற்கு முக்கிய காரணம் சீனாவுடன் நட்புறவை பேணலாம் என்ற எண்ணம்தான். ஆனால் அது இப்போது நடக்காத நிலையில் ஆஸ்திரேலியாவை மலபார் கூட்டுப்பயிற்சி சேர்த்துக் கொள்வதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 13 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது பற்றிய அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
அரபிக் கடலில் இரண்டாவது கட்டம்
செவ்வாய்கிழமையான, இன்று மலபார் கூட்டுப்பயிற்சி ஆரம்பித்துள்ளது. வரும் 6ம் தேதி வரை மொத்தம் மூன்று நாட்களில் இந்த பயிற்சி வங்கக்கடலில் நடைபெறும். இரண்டாவது கட்ட மலபார் பயிற்சி, அரபிக்கடலில் நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த முறை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் கடற்படை வீரர்கள் நேரடி தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார்கள். கடலில் பயிற்சி என்ற அளவில் மட்டுமே இது நடக்கும். 1992ம் ஆண்டு முதல் இந்தியா-அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இந்த பயிற்சியை நடத்தி வருகின்றன. இப்போது அது 4 நாடுகளாக அதிகரித்துள்ளது.
சீனா கோபம்
இந்த பயிற்சி, சீனாவை ஏன் கோபப்படுத்துகிறது என்பதற்கு காரணம் இருக்கிறது. பொருளாதாரத்தில் வலிமை பெறத் தொடங்கியதும், உலகின் பல நாடுகளையும் தனது ஆளுமையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று சீனா விரும்பத் தொடங்கியது. இந்த நிலையில்தான் மலபார் பயிற்சியை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு தான் பார்த்து வருகிறது.
இந்தோ-பசிபிக் மண்டலம்
இந்தோ பசிபிக் மண்டலத்தில் சீனா தனது வல்லாதிக்கத்தை செலுத்த விரும்புகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இதன் காரணமாகத்தான் உரசல் இருக்கிறது. குறிப்பாக சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியில் பிரச்சனையில் தான் இது அதிகரித்தது. சீனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து செயல்படுகிறது. இப்போது ஆஸ்திரேலியாவும் இவர்களோடு கைகோர்த்துள்ளது. இந்த ஆண்டு மலபார் பயிற்சி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான இந்த நாடுகளின் முயற்சி என்று சீனா நம்புவதால், மலபார் பயிற்சியை சீனா சந்தேகத்தோடு பார்க்கிறது.