சாத்தான் வேதம் ஓத வேண்டாம்.. வைகோ பனங்காட்டு நரி.. எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம்.. மல்லை சத்யா
சென்னை: சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரியின் அறிக்கை என மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் ஜம்மு- காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு நீக்க மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவை எம்பியான வைகோ பாஜக மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்து பேசினார்.
அரசு கலைப்பு
அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சி ஒரு மோசடியை செய்தது. காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ். பரூக் அப்துல்லா வீட்டில் டீ குடித்து கொண்டிருந்த போது அவரது அரசு கலைக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
அறிக்கை
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை. பரூக் அப்துல்லா சிறைவைக்கப்படவில்லை என்பது பொய் என வைகோ தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வைகோவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விசுவாசம் கிடையாது
அதில் அவர் கூறுகையில் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக வைகோ பேசியது தவறு. காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என்று அவர் கூற வேண்டும். வைகோ யாருக்குமே விசுவாசமாக இருந்தது கிடையாது என அழகிரி விமர்சனம் செய்திருந்தார்.
நாகரீகம்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறுகையில் வைகோ குறித்து காங்கிரஸின் அறிக்கை சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளது. நாகரீகம், ஜனநாயகம் குறித்து பேச அழகிரிக்கு தகுதி இல்லை.
உண்மை
வைகோ பனங்காட்டு நரி, எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டார். மாநிலங்களவையில் வைகோ பேசியது முழு உண்மை. காஷ்மீர் குறித்த கடந்த கால வரலாற்றைத்தான் பேசினார். உண்மை எப்போதுமே கசக்கத்தான் செய்யும்.
காங்கிரஸ் கட்சி
மாநிலங்களவையில் வைகோவின் பேச்சை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கே பாராட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். வைகோ கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்ட பிறகு அவர் முடிவெடுப்பார். வைகோ பற்றியும் நாட்டுக்கு அவர் பணியாற்றுவது குறித்தும் மக்களுக்கு தெரியும் என்றார் மல்லை சத்யா.