மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி இடையேயான பேச்சுவார்த்தையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டது.
பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் முறைசாரா மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி முதல் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
புராதான சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலை ஓரக் கடைகள் அகற்றப்பட்டு தற்காலிக சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சிற்பங்களைப் பார்வையிட்டபடி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடற்கரை கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
இன்று 2-வது நாளாக மாமல்லபுரம் அருகே கோவளத்தில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நீக்கப்பட்டது.