குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம்- ஸ்டாலினுக்கு மமதா அழைப்பு
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த வருகை தருமறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திமுக தலைமையில் சென்னையில் எதிர்க்கட்சிகள் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தின. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலினுக்கு மமதா அனுப்பிய கடிதத்தில், குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி ஆகியவற்றால் நாட்டின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போதைய மோசமான ஆட்சிக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அமைதியான, வலிமையான போராட்டங்கள் தேவை. இதற்கான அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோல் எதிரிக்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார்.