47 வயதுதான்.. கொரோனா கொடுமை.. மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி பரிதாப மரணம்
சென்னை: சென்னை மாம்பலம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 47.
சென்னையில் கொரோனா பாதிப்பு என்பது மிகவும் அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்தது தான். இன்று மட்டும், 1,276 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
மருத்துவ ஊழியர்களை போலவே காவல்துறையினரும் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொரோனாவிடம் சிக்கிய சென்னை.. போராளிகளாக களம் இறங்கும்.. 3000 வெளி மாவட்ட நர்ஸ்கள்
இன்ஸ்பெக்டர் பலி
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று, உயிரிழந்தார். முன்பு அவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆகும்.
முதல் போலீஸ் அதிகாரி
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த முதல் போலீஸ் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பல அதிகாரிகள் குணமடைந்தனர்
அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் முத்துசாமி போன்ற உயர் அதிகாரிகளும், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் இன்ஸ்பெக்டர் பாலமுரளி நோயின் காரணமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் இரங்கல்
முன்னதாக இன்று காலை முதல்வரின் தனி செயலாளர் தாமோதரன் நோய் தொற்று காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று அது பலனளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாலமுரளி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பபழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாலமுரளி குடும்பத்தில், தகுதியின் அடிப்படையில், ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.