சென்னையில் நாயை கொடூரமாக அடித்து இழுத்துச்சென்று தண்ணீரில் மூழ்கி கொன்ற நபர் கைது
சென்னை : சென்னை மூலக்கொத்தளத்தில் நாயை கொடூரமாக தாக்கி உயிரோடு கால்வாயில் போட்டு கொன்றவர் கைது செய்யப்பட்டார். விலங்குகள் நல அமைப்பு தந்த புகாரில் குமார் என்பவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்
சென்னை மூலகொத்தலம் பகுதியில் நாயை அடித்து காலை கட்டி சாலையில் இழுத்து சென்று கழிவுநீர் கால்வாயில் தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில் பரவி வந்தன.
மூலக்கொத்தலம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடந்த சம்பவம் குறித்து போட்டோ மற்றும் வீடியோவை ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த விலங்கு நல பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சாய் விக்னேஷ் என்பவருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் நேரடியாகச் சென்று சமூக வலைதளங்களில் பரவிய போட்டோ, வீடியோ உண்மை தானா என்று அப்பகுதிக்கு சென்று விசாரித்த போது அப்பகுதியில் வசித்த மக்கள் நடந்த சம்பவத்தை விளக்கி கூறினர்.
இதையடுத்து நாயை கால்வாயில் மூழ்கடித்து கொன்ற நபர் பற்றி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தங்களிடம் உள்ள போட்டோ, வீடியோவை காண்பித்து நாயை கொடூரமாக அடித்து கொலை செய்த மர்ம நபர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
ஒரு நபர் நாயை அடித்து, அதன் கால்களை கட்டி சாலையில் இழுத்து சென்று கழிவு நீர் கால்வாயில் வீசி எறிகிறார். கால்கள் கட்டப்பட்டதால் தப்பிக்க முடியாத அந்த நாய் கழிவுநீரில் துடிக்க துடிக்க உயிரிழந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பார்த்த காவல்துறையினர், மகேஸ்வரின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த மர்மநபர் இப்பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து போட்டோ மற்றம் வீடியோவில் உள்ள நபரை தேடிவந்தனர். தெருவில் சுற்றித் திரிந்த நாயை ஒருவர் கொடூரமாக அடித்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் இது தொடர்பாக குமார் எனும் நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறந்த நாயின் உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வாயில்லா ஜீவனை கொடூரமாக கொன்றவருக்கு தண்டனை தரவேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.