நர்ஸ், டாக்டர் மட்டுமே டார்கெட்.. வேறு யாரிடமும் வாலாட்ட மாட்டேன்.. முனியாண்டி திடுக் வாக்குமூலம்
சென்னை: சமீப நாட்களாக சென்னை அரசு மருத்துவமனைகளில் ஒரே களேபரம்தான். அதற்கு காரணம் மிஸ்டர். முனியாண்டி. அதுமட்டுமல்ல அவர் கொடுத்த வாக்குமூலமும்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது.
முண்டியாண்டியிடம் விசாரித்த போலீசாரே அவர் சொன்ன காரணத்தை கேட்டு கடுப்பாகியுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நபர் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளிலும் கைவரிசையை காட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் செல்போன் பார்க்கத் தடை.. மீறினால் ரூ.200 அபராதம்.. கிராமமே சேர்ந்து எடுத்த 'செம' முடிவு!
கைது
இது குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியர் என மூன்று பேரின் செல்போன்கள் ஒரே நாளில் காணாமல் போயுள்ளதாக புகார் வந்திருந்தது. இந்த புகாரையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் ஒரே நபர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் வியாசர்பாடியை சேர்ந்த முனியாண்டி என்பதும் உறுதி செய்யப்பட்டது.
ஏன்?
இதனையடுத்து அவரை தேடி வந்த நிலையில் நேற்று அவர் பர்மா பஜாரில் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. அதாவது, இவர் சில நாட்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தீக்காயம் ஏற்பட்ட கை விரல்களை மட்டும் வெட்டியெடுத்துவிட்டு அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். இதனால் முனியாண்டிக்கு மருத்துவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
விற்பனை
இதன் பின்னர்தான் அவர் இந்த திருட்டு வேலையில் ஈடுபட தொடங்கியுள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திராவில் உள்ள மருத்துவமனைகளிலும் இவர் கைவரிசை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, ராயப்பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், திருவள்ளூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், திருப்பதி அரசு மருத்துவமனை மற்றும் ஆந்திராவில் உள்ள மேலும் சில அரசு மருத்துவமனைகளில் இவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் செல்போன்களை மட்டும் குறி வைத்து திருடியுள்ளார். இவ்வாறு திருடப்பட்ட செல்போன்களை உடனடியாக ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விற்றுவிடுவதாகவும் ஷோல்டரை தூக்கி பந்தாவாக கூறியுள்ளார்.
கொள்கை
இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடி, போதை என ஜாலியாக வாழ்ந்துள்ளார். பொதுவாகவே இவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மொபைல்களை மட்டுமே திருடுவதாகவும் பொதுமக்களின் செல்போன்களை திருடுவதில்லை என்றும் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது செல்போன் திருட்டு வழக்கில் இவர் ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வந்திருக்கிறார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர்தான் இவர் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆனால் இந்த மூன்று மாதத்தில் மட்டும் 32 செல்போன்களை திருடியுள்ளார். இதுவரை தமிழ்நாடு ஆந்திரா என கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 200க்கும் அதிகமான செல்போன்களை திருடியுள்ளார். தற்போது இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என காவல்துறையினர் கூறியுள்ளனர்.