ஜெ. நினைவிடத்தில் செல்போன் திருட்டு.. வீடியோ காலில் அழைத்த வெள்ளையப்பன்.. சிக்கிய திருடன்!
சென்னை: ஜெயலலிதா நினைவிடம் அருகே தூங்கி கொண்டிருந்தவர்களிடம் செல்போன் திருடியவர் வீடியோ கால் பேசி சிக்கி கொண்டார். அவரை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு போய் போலீசில் ஒப்படைத்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் குருமன் குட்டையை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமான பணியாளராக வேலை பார்க்கிறார்.
இவர் தனது நண்பர்களுடன் அருகில் இருந்த அறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர் ஒருவர் நண்பர்களுடன் உள்ளே நுழைந்து அங்கிருந்த வெள்ளையப்பனின் செல்போன் உட்பட 4 பேரின் செல்போன்களை ஆட்டைய போட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
ரூ.20 ஆயிரம்
அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என கூறப்படுகிறது. கண்விழித்த வெள்ளையப்பன் பல இடங்களில் தனது செல்போனை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
வீடியோ கால்
பின்னர் வேறு ஒரு செல்போனிலிருந்து, தன்னுடைய நம்பருக்கு வெள்ளையப்பன் வீடியோ கால் செய்தார். வீடியோ கால் வந்தவுடன், திருட்டு ஆசாமியோ அதை ஆன் செய்து பேச ஆரம்பித்துவிட்டார்.
திருட்டு ஆசாமி
அப்போதுதான் தன்னுடைய செல்போன் திருடியவர் முகத்தை தன் செல்போனிலேயே பார்த்தார் வெள்ளையப்பன். பிறகு நண்பர்கள் உதவியுடன், திருட்டு ஆசாமி மற்றும் அவரது நண்பர்களை அலேக்காக தூக்கி கொண்டு போய் திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
நல்லிவீரன்
இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தியதில், சமாதி அருகே வந்து செல்போனை திருடி கொண்டு போனது கோவை கருப்பண்ண கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த நல்லிவீரன் என தெரியவந்துள்ளது. 6 செல்போன்களை பறிமுதல் செய்ததுடன், நல்லிவீரனையும் கைது செய்தனர்.