‘குட்டி யானை’ யை தள்ளு.. தள்ளு.. தள்ளு.. உதவி கேட்கப் போய் போலீசிடம் சிக்கிய ‘மங்குனி’த் திருடன்!
உதவி கேட்கப் போய் திருடன் ஒருவன் போலீசில் சிக்கியுள்ளான்.
சென்னை: திருடிய வாகனத்தை ஸ்டார்ட் செய்ய உதவி கேட்டபோது, திருடன் ஒருவன் கையும் களவுமாக போலீசில் சிக்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் காவலர்களாக பணிபுரிபவர்கள் செல்வமாணிக்கம் மற்றும் மதன் குமார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் புழல் சிறையின் வெளிக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேனீர் அருந்துவதற்காக இருவரும் சிறைக்கு எதிர்புறம் உள்ள டீக்கடைக்கு சென்றனர். அப்போது அங்கு டாடா ஏஸ் (குட்டி யானை) ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய நபர், வண்டி ஸ்டார்ட் ஆகாததால், வாகனத்தை தள்ளிவிடுமாறு செல்வமாணிக்கத்தையும், மதன்குமாரையும் கேட்டுள்ளான்.
காவலர்கள் இருவரும் வாகனத்தின் அருகே சென்று தள்ள முற்பட்டபோது, அதில் சாவி இல்லாததும், முன்பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்திருப்பதையும் பார்த்து சந்தேகமடைந்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தில் எழுதப்பட்டிருந்த செல்போன் நம்பருக்கு போன் செய்த போது, நேற்றிரவு அந்த வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தை எடுத்து வந்த நபரை போலீசார் இருவரும் மடக்கிப் பிடித்தனர். விசாரித்ததில், வாகனத்தை திருடிய நபர் 27 வயதான பாலகிருஷ்ணன் என்பதும், அவன் மீது கொலை முயற்சி உள்பட ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, பாலகிருஷ்ணனை கைது செய்து புழல் சிறைச்சாலை காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.