சுவாதி போல வெட்டுப்பட்ட தேன்மொழி - சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம்
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சூளைமேடு சுவாதி கொலையை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டர்கள். காலையில் வேலைக்கு செல்ல காத்திருந்த சுவாதி அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். அதேபோல இன்று இரவு பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய இளம்பெண் ஒருவரை அரிவாளால் வெட்டிய நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இருவருமே படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேத்துபட்டு ரயில் நிலையத்தில் இரவு 8 மணியளவில் நூற்றுக்கணக்கான பயணிகள் மின்சார ரயிலுக்காக காத்திருந்தனர். ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் எதிரே வந்த மின்சார ரயில் முன் அந்த இளைஞர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் தேன்மொழி என்பதாகும். 26 வயதாகும் இவர் கூட்டுறவு துறையில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். எழும்பூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். பணி முடிந்து விடுதிக்கு திரும்பும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேன்மொழியை வெட்டிய நபரின் பெயர் சுரேந்திரன் என்பதாகும். இவரும் ஈரோடைச் சேர்ந்தவர்தான். தேன்மொழியை வெட்டிய வேகத்தில் எதிரே வந்த மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் அவரும் படுகாயமடைந்தார். இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தேன்மொழியை சுரேந்தர் வெட்டுவதற்கு முன்பு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன்பின்னரே சுரேந்தர் வெட்டியதாகவும் தெரிகிறது. தேன்மொழியின் அலறல் சத்தம் கேட்டு சுரேந்தரை கூடியிருந்த பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது அரிவாளை கீழே போட்டு விட்டு அவர் ரயில்முன் பாய்ந்தார்.
ஒரே ஊரைச்சேர்ந்த இருவரும் காதலர்களா? ஒருதலைக்காதலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேன்மொழிக்கு கழுத்திலும் தாடையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரிவாளுடன் சுரேந்தர் ரயில் நிலையம் வந்திருக்கிறார்.
கடந்த 2016ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு வேலைக்கு செல்ல நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்த சூளைமேடு சுவாதி அரிவாளால் வெட்டிக்
கொல்லப்பட்ட சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் சென்னைவாசிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.