கூட்டாளியை கொல்ல சபரிமலைக்கு போன போது அரிவாள் வாங்கிய கும்பல்.. மாங்காடு கொலையில் பகீர் வாக்குமூலம்
சென்னை: கூட்டாளியை கொலை செய்ய சபரிமலைக்கு யாத்திரை சென்றபோது அரிவாள் வாங்கி வந்தோம்
என மாங்காடு அருகே வாலிபர் கொலை வழக்கில் கைதான கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மாங்காடு அடுத்த சிக்ராயபுரம், அனு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(28), பெயிண்டர் வேலை செய்து வந்தார் கடந்த போகி பண்டிகை தினத்தன்று கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து மாங்காடு போலீசார் யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கைதான அப்பு
இந்த நிலையில் யுவராஜின் நண்பரான அப்பு என்ற தாமோதரன்(23), என்பவர் கடைசியாக யுவராஜுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து அப்புவை கைது செய்தனர்.
யார் பெரிய ஆள்
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்களான ஜெகநாதன், முத்து (என்ற) முத்துக்குமார் ஆகியோரையும் கைது செய்து விசாரணை செய்ததில் பெயிண்டர் வேலைக்கு அனைவரும் ஒன்றாக சென்று வந்த நிலையில் மற்ற இடங்களில் கிடைக்கும் வேலைகளில் ஆட்களை பிடித்து அனுப்புவது மற்றும் ஏரியாவில் யார் பெரிய ஆள் என்பதில் யுவராஜ்க்கும், முத்துக்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது இந்த நிலையில் நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும்போது 3 பேரும் தனக்கு கீழ்தான் செயல்பட வேண்டும் இல்லையென்றால் அனைவரையும் கொன்று விடுவதாக யுவராஜ் மிரட்டி வந்துள்ளார்.
தீர்த்துகட்ட அரிவாள்
இந்த நிலையில் ஜெகன் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார். கடந்த மாதம் சபரிமலைக்கு சென்று விட்டு குற்றாலத்தில் இருந்து வரும்போது யுவராஜை தீர்த்துக்கட்ட அரிவாளை வாங்கி வந்துள்ளார்.
போதையில் சண்டை
சம்பவத்தன்று மூன்று பேரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த யுவராஜ் மூன்று பேரையும் திட்டியுள்ளார் மேலும் தீர்த்து கட்டி விடுவதாக கூறி உள்ளார். யுவராஜ்க்கு மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர். போதை தலைக்கேறியதும் ஆத்திரமடைந்த ஜெகன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து யுவராஜை வெட்டினார். இதையடுத்து மற்ற இருவரும் அரிவாளை வாங்கி யுவராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.
மூன்று பேரும் கைது
ஏரியாவில் யார் பெரிய ஆள் என்பதில் ஏற்பட்ட மோதலில் யுவராஜ் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.