தலைமைக்கு நெருக்கம்... தமிழக காங்கிரஸின் பவர் சென்டராக மாறும் மாணிக்கம் தாகூர் எம்.பி... !
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் ஏற்கனவே பல கோஷ்டிகள் உள்ள நிலையில், இப்போது புதிய பவர் சென்டராக உருவெடுத்துள்ளார் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர்.
ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டத்தில் இருப்பதால் மாணிக்கம்தாகூர் பின்னால் தமிழக காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த பலர் அணி வகுக்கக் தொடங்கியுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் சீட் வாங்குவதற்காக இப்போதே அவரிடம் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அடுத்தடுத்து கொரோனாவால் 20 பேர் பலி, மூடிமறைத்த பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை? சுகாதார துறை நோட்டீஸ்
கோஷ்டிப் பூசல்
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை சிதம்பரம் ஆதரவு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு, திருநாவுக்கரசர் ஆதரவு, தங்கபாலு ஆதரவு, என பல்வேறு கோஷ்டிகள் ஏற்கனவே உள்ளன. அந்த வரிசையில் புதிதாக வந்திருப்பது மாணிக்கம் தாகூர் ஆதரவு கோஷ்டி. காரணம் இவர் டெல்லியில் செல்வாக்கோடு திகழ்வது தான். ராகுல்காந்தியின் குட்புக்கில் இருக்கும் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களில் இவரும் ஒருவர்.
டெல்லியில் வசிப்பு
2019-ல் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்திருந்தால் மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சராக இருந்திருப்பார். விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள இவருக்கு தென் மண்டலம் மட்டுமின்றி மத்திய மண்டலத்திலும் ஆதரவாளர்கள் உள்ளனர். கட்சியினர் இவரிடம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க தவறமாட்டார். இதன் விளைவாக மாணிக்கம் தாகூருக்கு என தனி ஆதரவாளர்கள் வட்டம் பெருகியுள்ளது. அதில் குறிப்பாக இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் ஏராளம்.
சட்டமன்றத் தேர்தல்
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் புதிய பவர் சென்டராக உருவெடுத்து வரும் மாணிக்கம் தாகூர் எம்.பி., தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுலிடம் பேசத்தவறுவதில்லை. இங்குள்ள அரசியல் நிலவரம், கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடு பற்றி அவ்வப்போது ராகுலின் கவனத்துக்கு கொண்டு செல்லக் கூடியவர். இதனிடையே இவர் மூலமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் சீட் பெறுவதற்காக ஒரு பெரிய படையே சுற்றி வருகிறது.
சர்ச்சை பேச்சு
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த கருத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எதிர்வினையாற்றியது கவனிக்கத்தக்கது. இதனிடையே இவரை பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.