நீங்க சாத்துங்க தல.. நாங்க ஹேப்பியாய்க்கிறோம்.. இப்படி ஆயிப் போச்சே அமமுக நிலைமை!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த ஒரு ஆக்ஷன் அமமுகவினரை குஷிப்படுத்தியுள்ளதாம்.
ஆடிக்கு ஒண்ணு, அமாவாசைக்கு ஒண்ணுன்னு அமைச்சரை பதவியில இருந்து தூக்கலேன்னா அது ஜெயலலிதா அரசுக்கு அழகே அல்ல. அதே போல் 'அம்மா வழியில் நடக்கும் எடப்பாடியாரின் ஆட்சி' இரண்டு வருடங்களில் முதல் முறையாக ஒரு அமைச்சரை ரன் - அவுட் செய்து தனது பெயரை நிரூபித்திருக்கிறது.
தமிழக தகவல் தொழில் நுட்ப துறையில், துரை போல் அதிகாரம் காட்டிக் கொண்டிருந்த அமைச்சர் மணிகண்டனை தூக்கி வீசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்தளவுக்கு என்ன பண்ணிவிடார் மணிகண்டன்? என்றால்... அவர் என்னதான் பண்ணலை! என்று ஜெர்க் ஆகின்றனர் அ.தி.மு.க.வினர்.
மண்டைக் குடைச்சல் மணிகண்டன்
அதுகுறித்து நிறைய கதைகள் கிளம்பி வந்து கொண்டே உள்ளன. 2016 பொது தேர்தலில்தான் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார் மணிகண்டன். ஜெயிச்சதுமே அமைச்சர் பதவி. இந்த அதிரடி உச்சத்தால் ஏகத்துக்கும் கர்வம் அவரது உள்ளத்தில் உருவாகிவிட்டதாம். ஜெயலலிதா இருக்கும்போதே 'தான் தோண்றித் தனமாக பேசுகிறார்' என்று சொந்த மாவட்டமான ராமநாதபுரத்திலிருந்து அவர் மீது புகார் கணைகள் பாய்ந்தன. ஆனால் அதை தடுக்கும் விதத்தில் தடுத்து தப்பிக் கொண்டே இருந்தார்.
கருணாஸுக்கே டென்ஷனாம்ய்யா
ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் மணிகண்டனின் பேச்சும், செயலும் சர்வாதிகார உச்சம் தொட்டன! என்கிறார்கள் கட்சியினர். திருவாடாணை தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றின் தலைவருமான கருணாஸுக்கும், மணிகண்டனுக்கும் இடையில் பெரும் உரசல். ‘என்னை தொகுதிக்குள்ளேயே வர விடகூடாது எனும் எண்ணத்தில் இருக்கிறார். எனக்கு பாதுகாப்பு இல்லை!' என்று கருணாஸ் பொங்குமளவுக்குதான் பிரச்னைகள் போய்க் கொண்டிருந்தன.
ரொம்பத்தான் ஓவர்ணே
தினகரனுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் ரொம்ப ஓவராகவே போனார் மணிகண்டன். குறிப்பாக மைக் கிடைக்கும் போதெல்லாம் தினகரனை திட்டி தீர்த்தார். அதிலும் ‘ஆமை மூக்கன் கட்சி' என்று தினகரனையும், அவரது அ.ம.மு.க.வையும் அவர் இகழ்ந்தது அரசியல் அநாகரிக உச்சம்! என்று விமர்சகர்கள் கூறினர். ஆயிரம் இருந்தாலும் சக மனிதனை இவ்வளவு கேவலமாக ஒரு அமைச்சரானவர் சித்தரிக்க கூடாது. இளைஞர், அமைச்சரவைக்கு புதியவர், தகவல் தொழில் நுட்பம் எனும் மாடர்ன் துறையை வைத்திருப்பவர் இளம் நிர்வாக்கிகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும்! என்று வந்த அட்வைஸ்களை எல்லாம் தூக்கி பரணில் வீசிவிட்டு அதிரடி செய்து வந்தார்.
பியூஸ் பிடுங்கிய பழனிச்சாமி
இந்நிலையில்தான் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சிக்கப் போய் அதை வைத்து மணிகண்டனுக்கு ஆப்பு வைத்து விட்டார் முதல்வர். இது அதிமுகவிவனருக்கு எப்படியோ.. ஆனால் அமமுகவினர் குஷியாகியுள்ளனராம். தங்கள் தலைவர் தினகரனை மிக மோசமாக விமர்சித்து வந்த மணிகண்டனுக்கு ஃபியூஸ் பிடுங்கப்பட்ட களிப்பில் அ.ம.மு.க.வினர் ஏக குஷியாகி பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
அண்ணன் ஹேப்பி அண்ணாச்சி
எடப்பாடியாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் தினகரனும் செம்ம ஹேப்பி. தன் சகாக்களிடம் முதல்வரின் இந்த செயலை வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார் தினகரன். என்ன இருந்தாலும் ‘ஆமை மூக்கன்' அப்படின்னு சொல்றதெல்லாம் ஓவர்தானே!?.. அப்படிப்பட்டவரை நீக்கினால் ஹேப்பி வரத்தானே செய்யும்..!
- ஜி.தாமிரா