நான் ஒரு தேன்.. என்னை தேனீக்கள் மொய்க்கத்தானே செய்யும்.. மணிகண்டன் அலேக்!
சென்னை: நான் தேன் மாதிரி. தேனீக்கள் தேடி வந்து மொய்க்கத்தானே செய்யும். மக்கள் செல்வாக்கு இருக்கிற என்னை பல கட்சிக்காரங்களும் அப்ரோச் பண்ணத்தானே செய்வாங்க. ஆனால் நமக்குன்னு கொள்கைகள் இருக்குதே! நான் கடைசி வரைக்கும் அ.தி.மு.க.வுலதான் இருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவாகவே ஆகிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று எழுந்த விமர்சனங்களை முதல்வர் சமீபத்தில் நிரூபித்தது அமைச்சர் மணிகண்டன் விஷயத்தில்தான். சக அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனின் பிஸ்னஸ் பற்றி இவர் வெளிப்படையான பேட்டி தட்டி, பொதுவெளியில் தீயை பற்ற வைக்க, அடுத்த சில மணிநேரங்களில் அவரை அமைச்சரவையிலிருந்தே தூக்கி வீசிட்டார் எடப்பாடியார்.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தாண்டி, இ.பி.எஸ்.ஸின் அதிகாரம் எந்தளவுக்கு கோலோச்சுகிறது என்பதையும், கட்சி மிக முழுமையாக அவர் கையில்தான் இருக்கிறது என்பதையும், அமைச்சர்களை தன் ஆளுகைக்கு கீழ்தான் இ.பி.எஸ். வைத்துள்ளார் என்பதையும், ஜெயலலிதா போல் பிடிக்கவில்லையென்றால் அடுத்த நொடியே பதவி பறிப்பை அரங்கேற்றிடுவார் இ.பி.எஸ். என்பதையும் அரசியல் அரங்கத்துக்கு தண்டோரா போட்டு சொல்லிய சம்பவம்தான் இந்த பதவி பறிப்பு.
முதல்வருடன் பேச முயற்சி
பதவி பறிப்புக்குப் பின் மணிகண்டன் தன் அப்பாவுடன் சென்னை வந்து தங்கி, முதல்வரை சந்தித்து மன்னிப்பு கேட்டு, சமரசம் பேசி சமாதானம் செய்து, மீண்டும் எப்படியாவது அமைச்சர் பதவியை பெற்றிட வேண்டுமென்று முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் முதல்வரோ அசைந்து கொடுக்க மறுக்கிறார். மேலும் மணிகண்டனின் பதவியை பறித்த வகையில் எடப்பாடியார் மீது கட்சிக்குள் ஒருவித பயம், மரியாதை உருவாகியுள்ளது.
தாமதிக்கும் எடப்பாடியார்
இப்போது உடனே மணிகண்டனுக்கு பதவியை திருப்பிக் கொடுத்தால், இவரு பறிப்பாரு, மன்னிப்பு கேட்டால் திருப்பிக் கொடுத்துடுவாரு. இவ்வளவுதான் இ.பி.எஸ்.ஸின் பூச்சாண்டித்தனம் என்று பேசியபடி ஆளாளுக்கு பயமில்லாமல் ஆடத் துவங்கிவிடுவார்கள். அதன் பின் கட்சி தன் கையில் இருக்காது: என்பதே எடப்பாடியாரின் பயம்.
கட்சி தாவுவாரா
இந்நிலையில் சென்னையிலேயே முகாமிட்டிருக்கும் மணிகண்டன், முதல்வர் விரைவில் சமாதானமாகி அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை கொடுக்கவில்லையென்றால் தி.மு.க.வுக்கோ அல்லது அவரால் தாறுமாறாக கழுவி ஊற்றப்பட்ட அ.ம.மு.க.வுக்கோ போய்விடுவார் என்று ஒரு பேச்சு வலுவாக போய்க் கொண்டிருக்கிறது.
மொய்க்கத்தானே செய்வாங்க
இது பற்றி மணிகண்டனிடமே கேட்டதற்கு, நான் இன்னமும் சென்னையில்தான் இருக்கேன். தலைமையின் பதிலுக்காக வெயிட் பண்ணிட்டே இருக்கிறேன். நான் தி.மு.க.வுக்கு போகப்போறேன், அ.ம.மு.க.விலிருந்து என்னை அழைக்கிறாங்கன்னெல்லாம் பேசிக்கிறாங்க. நான் தேன் பாஸ். தேனிக்கள் தேடி வந்து மொய்க்கத்தானே செய்யும். மக்கள் செல்வாக்கு இருக்கிற என்னை பல கட்சிக்காரங்களும் அப்ரோச் பண்ணத்தானே செய்வாங்க. ஆனால் நமக்குன்னு கொள்கைகள் இருக்குதே! நான் கடைசி வரைக்கும் அ.தி.மு.க.வுலதான் இருப்பேன்." என்றிருக்கிறார்.
பின்றீங்களே மணிஜி!
- ஜி.தாமிரா