திருவாரூர் இடைத்தேர்தல்.. நாங்களும் திமுகவை ஆதரிக்கிறோம்.. மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
சென்னை:திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
கருணாநிதியின் மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்பையடுத்து, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
வேட்பாளர் தேர்வு, அதற்கான ஆலோசனை கூட்டம் என்று முக்கிய அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அதன் தோழமை மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து அறிவித்துள்ளன.
திமுகவை திருவாரூர் இடைத்தேர்தலில் ஆதரவளிப்பதாக மதிமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவுக்கு ஆதரவை தருவதாக அறிவித்துள்ளது.
திமுகவுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மனிதநேய மக்கள் கட்சி பரப்புரை
தமிழகத்தில் திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பரப்புரை செய்து அவர் மகத்தான வெற்றியைப் பெற உழைப்பார்கள்.
கேலிக்கூத்தாக்கும் பாஜக
அரசியல் சாசனச் சட்டம், மதச்சார்பின்மை, சமூகநீதி போன்றவற்றை மத்திய பாஜக அரசு கேலிக் கூத்தாக்கி வருகிறது. அதற்கு ஆதரவாக செயல்பட்டு மாநில உரிமைகளையும், தமிழக மக்கள் நலன்களையும் மத்திய அரசிடம் அதிமுக அடகு வைத்துள்ளது.
முன்னோட்டமானது இடைத்தேர்தல்
எனவே, அதிமுக ஆட்சியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் திருவாரூர் தொகுதி தேர்தல் ஒரு முன்னோட்டமாகும். அதனை உணர்ந்து திருவாரூர் வாக்காளர்கள் அனைவரும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்து மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.