அறிவுரை மட்டும் வழங்கினால் போதாது.. சாமானிய மக்களுக்கு நிவாரணம் தேவை- ஜவாஹிருல்லா
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்படும் சாமானியர்களுக்கு பிரதமர் மோடி என்ன நிவாரண உதவி செய்யப் போகிறார் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மோடியின் உரையில் நிவாரண உதவிகள் தொடர்பாக எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பசி பட்டினி
பிரதமர் ஆற்றிய உரையில் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தெரிவித்தாரே தவிர மத்திய அரசு மக்களுக்கு என்ன செய்யும் என்பதைத் தெரிவிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து, தொழில்கள் முடங்கி, வருமானம் இல்லாமல் வீட்டிலே பசியாலும், பட்டினியாலும் அவதியுறும் மக்களுக்கு என்ன நிவாரணத்தை மத்திய அரசு வழங்கும் என்பதை மோடி தெரிவிக்காதது பெரும் ஏமாற்றமே!
பயனற்ற நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றபோதும் இதுவரை அமலிலிருந்த ஊரடங்கு உத்தரவில் மத்திய அரசு மக்களின் பசியையும், பட்டினியையும் புரிந்து கொள்ளாதது ஏன்? மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதைத் தடுத்தும், ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் போதிய நிவாரணத்தை முழுமையாக ஒதுக்காமலும் ஊரடங்கை நீட்டிப்பது பயனற்றது.
சிக்கலான சூழல்
வீட்டிலேயே முககவசம் செய்து கொள்வது, முதியோர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட ஏழு வாக்குறுதிகளை மக்களிடம் கேட்டுள்ள மோடி இந்த சிக்கலான சூழ்நிலையில் பொருளாதாரத்தை இழந்துள்ள நாட்டு மக்களுக்கு என்ன வாக்குறுதியை அளிக்க உள்ளார்?
அக்கறை இல்லை
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முடங்கிக் கிடக்கும் 3 கோடி பிற மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல எவ்வித திட்டத்தையும் பிரதமர் அறிவிக்காதது சாமானிய மக்கள் மீது இந்த அரசிற்கு அக்கறை இல்லை என்பதைத் தானே வெளிப்படுத்துகிறது.
மே-3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொதுமக்கள் பசி பட்டினியால் வாடாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை இல்லாமல் இருந்தால்தான் இந்த ஊரடங்கு உத்தரவு முழுமையான வெற்றி பெறும் என்பதை மோடியின் மத்திய அரசு உணராதது ஏன்?