பத்திரிகையாளர் மீது தாக்குதல்... முதல்வர் மவுனம் காக்ககூடாது... ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: விருதுநகரில் பத்திரிகையாளர் கார்த்தி என்பவர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் வழக்கம் போல் தமிழக அரசு மவுனம் காப்பது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் விருதுநகர் மாவட்டச் செய்தியாளர் கார்த்தி என்பவர் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி தப்பியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்து£ர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் உள்ள உட்கட்சி பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் ராஜவர்மனுக்கு ஆதரவாக உள்ளார் எனச் செய்தி வெளியிட்ட காரணத்தால், செய்தியாளர் கார்த்தியை அடையாளம் தெரியாத நபர் தொலைப்பேசியில் அழைத்து இந்த செய்தி தொடர்பாக மேலும் பல தகவல்களை அளிப்பதாகக் கூறி வரவழைத்து கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.
அதிமுகவில் ராஜ்யசபா எம்பி வேட்பாளர்கள் யார் யார்? பரபரப்பு தகவல்கள்
பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் அதனைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, இந்த தாக்குதல்களை சாதாரணமானத் தாக்குதலாகக் கருதி மௌனம் காப்பது ஏற்புடையது அல்ல. எனவே, செய்தியாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்து அவர்களை சட்டரீதியாகத் தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனிடையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திரபாலாஜியை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருவதால் இது குறித்து ஆளுநர் முதல்வரிடம் விரைவில் விளக்கம் கேட்பார் எனக் கூறப்படுகிறது.