விவசாய வயல்களை நாசம் செய்வதா..? இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!
சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாய வயல்களை நாசம் செய்யும் வகையில் எண்ணெய் எரிவாயு குழாய்கள் அமைக்கும் அடாத செயல் கடும் ஆட்சேபனைக்குரியது எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தகுதி-திறமை என்ற போலி வாதத்தால் மீண்டும் ஒரு உயிர் பலி... ஒன்றிய அரசு தான் பொறுப்பு -ஜவாஹிருல்லா
இந்தியன் ஆயில்
''தமிழ்நாட்டின் பல பகுதிகள் மட்டுமன்றி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் முயற்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் இறங்கியுள்ளது. காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழாய்களை அமைக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருவது கடுமையான ஆட்சேபனைக்கு உரியது.
77 ஊர்களில்
தஞ்சாவூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் என ஏழு மாவட்டங்களில் 14 வட்டங்களில் எழுபத்தி ஏழு ஊர்களில் உள்ள ஏராளமான விவசாயிகளின் வயல்களில் எண்ணெய் எரிவாயு குழாய் பதிக்க உள்ளதாக பத்திரிக்கைகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
27 நாட்களுக்குள்
இருபத்தி ஏழு நாட்களுக்குள் நில உரிமை மாற்றம் உள்ளவர்கள் மட்டும் தெரிவிக்கலாம் என்று கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபணைகளை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. தமிழக விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த அடாத செயலை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கேட்டுக் கொள்கின்றேன்''. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
குழப்பம்
டெல்டா மாவட்டங்களில் கடந்த கால் நூற்றாண்டுகளாக செயல்பட்டு வந்த கச்சா எண்ணெய் -எரிவாயு கிணறுகளால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம், நடத்திய போராட்டங்கள் ஏராளம். இதனிடையே காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் எரிவாயு குழாய் அமைப்பது தொடர்பான பத்திரிகை அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.