முன்பும் இப்படி இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது.. மன்மோகன் சிங் என்ன செய்தார் தெரியுமா?
சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை, மத்திய அரசு நீக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
Recommended Video
ஆனால், மத்திய அரசோ, இது, ஏற்கனவே பரிசீலனையில் இருந்த முடிவுதான் என்றும், மனிதாபிமான அடிப்படையில் இதைச் செய்வதாகவும் கூறி உள்ளது. இருப்பினும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை, உள்ளூரில் கிடைக்காத நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சரியல்ல என்று நெட்டிசன்கள் பலரும் கூறி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில்தான் 2005ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு எதிராக, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்த ஒரு உறுதியான நடவடிக்கை தொடர்பான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
|
பாதுகாப்பு ஆலோசகர்
இந்த தகவலை அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் ஒருமுறை வெளிப்படுத்தியிருந்தார். அதை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு, பின்னர், பல ஊடகங்களிலும் அந்த செய்தி அப்போது வெளியாகி இருந்தது எனவே இந்த சம்பவத்துக்கு இதுதான் ஆதாரம் என்று இந்த பதிவை ஷேர் செய்யக்கூடிய நபர்களால், நாராயணன் கூறிய தகவல் அடங்கிய செய்தி, முன்வைக்கப்படுகிறது.
அணு ஒப்பந்தம்
அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம் வாருங்கள்: 2005, ஜூலை 17. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த அறிவிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இதைத்தான் நாளை அறிவிக்கப்படும் என்று கள்ளத்தனமாக அமெரிக்கா நீட்டியது. முதல் நாள் இரவில் கொடுத்தால் இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம்.
ஓடி வந்த ரைஸ்
மன்மோகன்சிங், ரத்தின சுருக்கமாக, நாளை எந்த அறிவிப்பும் இல்லை, இந்த ஒப்பந்தம் கேன்சல் செய்யப்படும் என்று ஒரு செய்தியை அனுப்பினார். அலறியடித்துக்கொண்டு அந்த இரவிலேயே அமெரிக்காவின் அப்போதைய செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் காண்டோலீசா ரைஸ், மன்மோகன்சிங்கை சந்திக்க அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு ஓடோடி வந்து காத்திருந்தார்.
கமா மாறக்கூடாது
அவரை சந்திக்க சரியான நேரம் இல்லை என்று மறுத்துவிட்டார் மன்மோகன் சிங். பிறகு அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கிடம் பேசி, அவர் மூலம் மன்மோகன் சிங்கை சந்தித்தார் காண்டோலீசா ரைஸ். நாம் முதலில் இறுதி செய்த ஒப்பந்தத்தில், ஒரு கமா மாறி இருந்தாலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது இல்லை என்பதை உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள் என்றார் மன்மோகன் சிங்.
கருத்துக்கள்
எனவே பழைய இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா திரும்பிய மன்மோகன் சிங் இதை விளம்பரப்படுத்தல் அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார். இவ்வாறு செல்கிறது அந்த பதிவு. இந்த ஃபேஸ்புக் பதிவு தற்போது பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் எம்.கே.நாராயணன் போன்றோர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது.. மன்மோகன் சிங், ஜார்ஜ் புஷிடம் இவ்வாறு செய்திருக்க வாய்ப்பு இல்லை.. என்றெல்லாம் பாஜக ஆதரவு நெட்டிசன்கள் பதில் கருத்துக்களை கூறி வருவதையும் பார்க்கமுடிகிறது.
|
முரசொலி மாறன்
தோஹாவில் 142 நாடுகள் கலந்து கொண்ட WTO மாநாடு. மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான ஒப்பந்தம் என இந்தியாவின் காமர்ஸ் அமைச்சர் முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து அந்த மாநாட்டையே ஸ்தம்பிக்க வைத்தார். பிறகு அமெரிக்கா பணிந்து, கேட்ட திருத்தமெல்லாம் செய்த பிறகே இந்தியா கையெழுத்திட்டது வரலாறு. இப்படி சொல்கிறார், ஒரு நெட்டிசன்.