தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறாரா மன்மோகன் சிங்?
சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட உள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைகிறது. அதுபோல தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜுனன், ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், டி.ரத்னவேல் (அதிமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய 6 பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2019 ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் நடந்து முடிந்த இடைதேர்தளுக்குப் பின்னர் திமுகவின் பலம் சட்டப்பேரவையில் 101 ஆக உயர்ந்துள்ளது. ஆகவே திமுக சார்பில் இம்முறை 3 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதுபோலவே அதிமுக சார்பிலும் 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
திமுக சார்பில் தேர்தல் தொகுதி பங்கீட்டின்போதே மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என்று உறுதி கூறப்பட்டிருந்தது. அதுபோல அதிமுக சார்பில் பாமகவுக்கு ஒரு இடம் தரப்படும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது. வைகோவுக்கு ஒரு சீட் வழங்கியது போக மீதமுள்ள இரு இடங்களில் ஒரு இடத்தை திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு அதாவது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கலாம் என தெரிகிறது.
மன்மோகன் சிங் தொடர்ந்து 5-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவர் தற்போது அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி வரும் ஜூன் 7-ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லை.
இதனால், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்வாக முடியாது. அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் 2020 ஏப்ரலில்தான் 55 மாநிலங்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது அதுவரை மன்மோகன் சிங் காத்திருக்க வேண்டும்.
ஆகவே தமிழகத்தில் இருந்து திமுக ஆதரவுடன் மன் மோகன் சிங்கை மாநிலங்களவை எம்பி.யாக்க சோனியா முயற் சித்து வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக சோனியா திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூலை மாதம் நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் தேர்வு செய்யப்படவுள்ளார் என்றே திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.