நரசிம்மராவுக்கு பிறகு மன்மோகன்சிங்தான் பெஸ்ட் பிரதமர்.. விபத்தால் வந்தவர் இல்லை.. சொல்வது சிவசேனா
சென்னை: மன்மோகன் சிங் ஒரு வெற்றிகரமான பிரதமர், விபத்தால் ஏற்பட்ட பிரதமர் கிடையாது என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆதரவாளரான அனுபம்கேர், மன்மோகன்சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விபத்தால் பதவிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங் என்ற பொருளில், 'The Accidental Prime Minister' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
வரும் 11-ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.
திரைப்படம்
இந்த திரைப்படத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் பேச்சை கேட்டு, மன்மோகன் சிங் செயல்பட்டதாக விமர்சன காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் மன்மோகன் சிங், விபத்தால் வந்த பிரதமர் அல்ல என்றும் அவர் வெற்றிகரமான பிரதமர் என்றும் சிவசேனா கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
10 வருடங்கள்
10 வருடங்களாக பிரதமர் பொறுப்பில் இருந்துள்ளார் மன்மோகன்சிங். மக்கள் அவரை மதிக்கிறார்கள். எனவே அவர் விபத்து காரணமாக பிரதமர் பதவிக்கு வந்தவர் அல்ல. நரசிம்மராவுக்கு பிறகு நாடு கண்ட, ஒரு வெற்றிகரமான பிரதமர் என்றால் அது மன்மோகன்சிங்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிளவு
பாஜக மற்றும் சிவசேனா இரு கட்சிகளும் நீண்ட காலமாக அரசியலில் கூட்டணிக் கட்சிகளாக விளங்கியவை. கடந்த ஆண்டு இரு கட்சி கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்த நிலையில் சஞ்சய் ராவத் இவ்வாறு கூறியுள்ளார்.
தனித்து போட்டி
மேலும், அவர் கூட்டணி பற்றி, தெரிவிக்கும்போது, சிவசேனா தனது செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி உறுதியாக நிற்கிறோம். கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே எடுக்கும் முடிவே இறுதியானது. நாங்கள் போராளிகள். தப்பித்து ஓடுவோர் கிடையாது. மகாராஷ்டிரா, சத்திரபதி சிவாஜி, பால் தாக்ரேவுக்கு சொந்தமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.