நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிய நித்தியானந்தா மீது தேசதுரோக வழக்கு- மன்னார்குடி ஜீயர் கோரிக்கை
சென்னை: நேபாளம் வழியாக வெளிநாடு தப்பிச் சென்ற சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மன்னார்குடி ராமானுஜ ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சிறுமிகளை கண்டுபிடித்து தரக் கோரி அகமதாபாத் போலீசில் புகார் கொடுத்தார் ராமானுஜ ஜீயர். பின்னர் டெல்லியில் நித்தியானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன சர்மாவுடன் இணைந்து நேற்று செய்தியாளர்களிடம் நித்தியானந்தா மீது புகார்கள் தெரிவித்தார் ராமானுஜ ஜீயர்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையத்தில் ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது.
அதனால் நேபாளம் வழியாக நித்தியானந்தா வெளிநாடு சென்றுள்ளார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும். நித்தியானந்தாவை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றார்.