ஓட்டு மெஷினில் கோல்மால்.. உச்சநீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் அதிரடி வழக்கு
டெல்லி: வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்ய முடியும் என்றும், நிரூபித்துக் காட்ட தனக்கு அவகாசம் தரும்படியும், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட, நடிகர் மன்சூர் அலி கான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் மன்சூர் அலி கான். தமிழக தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்தவர்களில் இவரும் ஒருவர். குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது, ஊசி மணி, பாசி மணி விற்பது என, மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரம் மிகுந்த வித்தியாசமாக இருந்தது.
தேர்தல் முடிவுகளில், திமுக வேட்பாளர் வேலுசாமி, 746523 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர், ஜோதிமுத்து, 207551 ஓட்டுக்களை பெற்றார்.
சுயேச்சையான, ஜோதிமுருகன், 62,875 ஓட்டுக்களை பெற்றார். மன்சூர் அலிகான், 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்.
மீண்டும் கர்ஜனைக்கு தயாராகிறது வைகோ புயல்.. ராஜ்யசபா போட்டி குறித்து 30ம் தேதி அறிவிப்பு
இருப்பினும் தோல்வியால் துவளவில்லை, மன்சூர் அலிகான். உச்சநீதிமன்ற படிக்கட்டு ஏறியுள்ளார் அவர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள, மன்சூர் அலிகான், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்றும், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், அந்த அனுமதியின்பேரில், தானே இதை நேரடியாக நிரூபித்து காட்டுவேன் என்றும், ரிட் மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஒருவேளை, தேர்தல் ஆணையம் அனுமதியளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், மன்சூர் அலிகான் என்ன செய்து மோசடி குறித்து காண்பிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எகிறியுள்ளது.