எல்லாம் பொய்.. முகிலன் மீது பாலியல் வழக்கா? நிர்மலாதேவி ஏன் ஜெயிலில் இருந்தார்? விளாசிய மன்சூர்
முகிலனை விடுவிக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கோரிக்கை விடுத்துள்ளார்
Recommended Video
சென்னை: "பாலியல் குற்றச்சாட்டு உள்ள ஆளுநர் கைது செய்யப்பட்டாரா, நிர்மலாதேவி ஏன் ஒன்றரை வருஷம் சிறையில் இருந்தார். பாஜக ஆட்சியில் வட மாநிலங்களில் பல பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்களா? முகிலன் மீது மட்டும் ஏன் பொய் வழக்கு பதிய வேண்டும்" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்துவிட்டார் நடிகர் மன்சூரலிகான்.
ஆரம்பத்தில் இருந்தே சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருபவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மன்சூரலிகான். முகிலன் மாயமான சமயத்தில், "முகிலன் உயிருக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.. காவல் ஆணையர் முதல் சென்னை கமிஷனர் வரை பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முகிலனை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்காக காலையிலேயே மன்சூர் அலிகான் கோர்ட்டுக்கு வந்து காத்து கிடக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:
மக்களை நேசிக்கிறார்
"காணாமல்போன முகிலன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கின்றது. அவர் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய இந்த மண்ணை நேசிக்கிற, இந்திய மக்களை நேசிக்கின்ற ஒரு மனிதனாக முகிலனை பார்க்கிறேன்.
களங்கம்
ஸ்டெர்லைட் என்பது தமிழ் இன மக்கள் மீது ஏவப்பட்ட இன படுகொலை நிறுவனம். இதுநாள் வரை முகிலன் மீது பாலியல் வழக்கு இல்லை. தற்போது திடீரென போடப்பட்டுள்ளது. இது போராளிகள் மீது களங்கம் ஏற்படுத்தவே போடப்பட்டுள்ள பொய்வழக்கு. இந்து தர்மப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் எப்படி முகிலன் புகார் அளித்த பெண்ணிற்கு திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்திருப்பார்? அதனால் இது பொய் வழக்கு என்பது வெளிப்படையாக தெரிகிறது.
நிர்மலாதேவி
பாலியல் குற்றச்சாட்டு உள்ள ஆளுநர் கைது செய்யப்பட்டாரா, நிர்மலாதேவி ஏன் ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார்? பாஜக ஆட்சியில் வட மாநிலங்களில் பல பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். பலர் கொலை செய்யப்படுகின்றனர். அவர்களை எல்லாம் கைது செய்து விட்டார்களா?
ஓட்டுக்கு பணம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் 4 வருஷம் தலைமறைவாக இருந்தார்? ஈழத்தில் கற்பழிக்கப்பட்டார்கள், காஷ்மீரில் இன்றும் கற்பழிக்கப்படுகிறார்கள்.. இதனை எல்லாம் தடுத்து விட்டார்களா? ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்போர் இருக்கும் வரை மோசமான அரசியல்வாதிகள் இருக்கதான் செய்வார்கள்.
விடுதலை செய்ய வேண்டும்
உள்ளாட்சி தேர்தல் மட்டும் ஒழுங்காக நடத்தவில்லை என்றால் வாக்கு செலுத்தும் இயந்திரத்தை கொளுத்தும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு இருக்கிறது. இதை டெல்லியில் நிரூபணம் செய்ய போகிறேன். பொய் வழக்குகளை முடித்து விட்டு உடனடியாக முகிலனை வெளியே விட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் தெரிவித்தார்.