பெரியார் பேசியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.. இது குற்றமா.. திருமாவளவனுக்கு ப.சிதம்பரம் ஆதரவு
சென்னை: மனுஸ்மிருதி தொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது போலீஸ் குற்றவியல் குற்றம் என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சரியான நடைமுறை இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, மனுஸ்மிருதி என்ற நூலில்
பெண்கள் குறித்து குறிப்பிடப்பட்டதாக ஒரு கருத்தை கூறினார்.
பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அந்த கருத்துக்கள் இருந்ததாக கூறி எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திருமாவளவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
மாவீரர்கள் வாழ்ந்த கொங்கு சீமை.. தமிழக மானத்தை மீட்டெடுக்க வேண்டும்.. ஸ்டாலின் அழைப்பு
விசாரணை
இந்த நிலையில்தான், நடந்தது என்ன என்பது குறித்து, உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸாருக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதையடுத்து, திருமாவளவன் பேட்டியை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.
திருமாவளவன் மீது வழக்கு
இந்த ஆய்வுக்கு பிறகு திருமாவளவன் மீது புகார் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக காவல்துறை முடிவு செய்தது. கலகம் விளைவிக்கும் ஒரு கருத்தோடு செயல்படுதல், சமயம் இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கண்டனங்கள்
இதனிடையே, திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் திருமாவளவனின் கருத்தை திரித்து இந்துப் பெண்களுக்கு எதிராக சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது எனதமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனுஸ்மிருதியை தடை செய்.. சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
குற்றவியல் குற்றம் இல்லை
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும்?
பெரியார் பேசியிருந்தால்
பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, திருமாவளவன் மீது பதியப்பட்டது போலி வழக்கு எனக்கூறி, அதை திரும்பப் பெற திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.