என்ன செய்யப்போகிறது அரசு.. நாலாபக்கம் தமிழகத்தில் முடங்கும் தொழில்.. கொரோனாவால்!
சென்னை: கொரோனா வைரஸ் மற்றும் அதனால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனால், இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு அசாதாரண தொழில் முடக்கத்தை தமிழகம் சந்தித்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர மக்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவியதன் காரணமாக மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு தொடர்ந்து 80 நாட்களை கடந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தொழில்கள் முடங்கி உள்ளன. மக்கள் வேலைக்கு செல்லாததால் பெரும்பாலான மக்களிடம் கையில் பணம் இல்லை. அன்றாடம் கூலி வேலை செய்வோர் வேலைக்கு செல்ல வழி இல்லாமல் பணமும் இல்லாமல் பசியோடும் வறுமையோடும் நாட்களை கழித்து வருகிறார்கள்.
கொரோனா இப்ப போகும், அப்ப போகும் என்று நம்பிக்கொண்டிருந்த மக்கள் அது பரவும் வேகத்தால் பீதி அடைந்துள்ளனர். கொரோனா குறையும் என்ற நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்காமல் இப்போதைய பிரச்சனைகள் ஓயப்போவது இல்லை. மக்கள் கொரோனாவுடன் வாழ பழகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
யம்மாடியோ.. 62 நாள் கொரோனா சிகிச்சைக்கு ரூ. 8.35 கோடி பில்.. ஷாக்கான அமெரிக்க தாத்தா
50 ஆயிரத்தை தொடும்
தமிழகத்தில் போன மாதம் ஆயிரங்களில் இருந்து கொரோனா பாதிப்பு , இன்று 46 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்னும் ஒரிரு நாளில் 50 ஆயிரத்தை தொடும் நிலை உள்ளது. இதனால் மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுனில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் இல்லை
தமிழகத்தில் தற்போது காய்கறி கடைகளில் கூட கூட்டம் இல்லை. உணவகங்களுக்கு முன்பு போல் மக்கள் அதிகம் செல்வதில்லை. ஏன் டாஸ்மாக் கடைகளுக்கு கூட யாரும் அதிகம் செல்வது இல்லை. நகை கடை, ஜவுளி கடை, வாகன விற்பனை நிலையங்கள், அழகு நிலையங்கள், மளிகை கடைகள், ஸ்டேசனரி கடைகள், வளையல் கடைகள், ஹார்டுவேர் கடைகள் என எந்த கடையிலும் வியாபாரம் இல்லை.
அரசு ஊழியர்கள்
ஒரு சிலர் இருப்பு காசு வைத்துள்ளவர்கள், அரசு ஊழியர்கள், மாத சம்பளக்காரர்கள் இவர்கள் தான் கடைகளுக்கு சென்று விரும்பியதை வாங்க முடியும் நிலை உள்ளது. சமானியர்கள், சுய தொழில் செய்பவர்கள், வணிகர்கள் உள்பட பலரும் தொழில் முடக்கத்தால் பிழைக்க வழியில்லாமல் நொறுங்கி போய் கிடக்கிறார்கள்.
ஊருக்கு போக முடியாது
தனியார் நிறுவனங்களில் வேலை செய்த மாத சம்பளக்காரர்கள் பலர் தொழில் முடக்கத்தால் வேலை இழந்துள்ளார்கள். இதனால் சென்னை உள்பட பெருநகரங்களில் 4 மாதங்களாக வாடகை கொடுக்க முடியாமல், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸுக்கு பணம் சேர்க்க முடியாமல், அடுத்த வேளை சோற்றுக்கும் வழிகளை உருவாக்க என்னசெய்வது என்று புரியாமல் மாதசம்பளக்காரர்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளார்கள். அத்துடன் ஊருக்கும் போக முடியாத நிலையில் உள்ளார்கள்.
எல்லாம் காலி
கோடிகளை குவித்தவர்களும் அரசு ஊழியர்கள், பெரிய நிறுவனங்களில் உயர்ந்த சம்பளத்தில் உள்ளவர்கள் மட்டுமே கொரானா லாக்டவுனில் இருந்து தப்பி உள்ளனர். மற்றபடி தொழில் செய்பவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தாலும். அந்த கம்பெனியில் வாட்ச் மேன் ஆக இருந்தாலும், பெரும் நஷ்டத்தையும் பாதிப்பையும் சந்தித்து வருகிறார்கள் என்பதே உண்மை. சினிமா துறை இந்த லாக்டவுனால் பேரழிவை சந்தித்துள்ளது. பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். ஜவுளி துறையும், வாகன உற்பத்தி துறையும் இதுவரை சந்திக்காத பாதிப்பை சந்தித்துள்ளனர். இவை மட்டுமல்ல அனைத்து தொழிலும் முடங்கி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை
மொத்தத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதனால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனால், இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு அசாதாரண தொழில் முடக்கத்தை தமிழகம் சந்தித்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர தொழில் செய்வோருக்கு மிகப்பெரிய அளவில் உடனடி கடன் உதவியும், ஜிஎஸ்டி வரிகுறைப்பும், வருமான வரி குறைப்பும் மிக அவசியம் ஆகும். இதேபோல் சமானியர்களுக்கு அரசு உடனடியாக நிதியுதவி அளிக்க வேண்டும். தொழில் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைந்த பட்சம் மக்கள் மீண்டு வரும் வரையாவது ரத்து செய்ய வேண்டும். இதை செய்தால் தான் மக்கள் இயல்பு நிலைக்கு வர உதவியாக இருக்கும்.