யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியத்திற்கு ஆபத்து.. பக்தர்கள் கோபம்
Recommended Video
சென்னை: உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் கட்டிடக்கலைக்கு, திடீர் சாமியார்களால் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை இதற்கு உடந்தையாக இருப்பது அம்பலமாகி உள்ளது.
மாமன்னன், ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்ட ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம் என்பது பெரிய கோயில் என்று வழங்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டிடக் கலை நுட்பம், இன்றளவுக்கும் கூட புரியாத புதிராக உள்ளது. தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக் கலையை கண்டு வியந்த, யுனெஸ்கோ அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் செய்துள்ளது.
பாரம்பரிய சின்னம்
பாரம்பரிய சின்னம் அங்கீகாரம் பெற்ற இடத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் இருக்கும். அங்கு உள்ள ஒரு சுவற்றில் கூட யாரும் கை வைத்து விட முடியாது. ஆனால் உலகமெங்கும் இருந்து பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கும், அதன் கட்டிடக்கலைக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளார் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
புல்வெளி
நாளை வெள்ளிக்கிழமை முதல், இரண்டு நாட்களுக்கு, தியான நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக அறிவித்துள்ள ரவிசங்கர், தஞ்சை பெரிய கோயில் வளாகத்தை அதற்காக தேர்வு செய்துள்ளார். இங்குதான் சிக்கல் ஆரம்பமாகிறது. தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் கண்களை கவரக்கூடிய ஒரு இடம், அங்கே உள்ள புல்வெளி. இது தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. அப்படி இருந்தும், அந்தப் புல்வெளியில் கம்புகளை நட்டு, இரும்பாலான மேற்கூரையுடன் கூடிய பந்தல்களை அமைத்துள்ளது வாழும் கலை அமைப்பு.
யமுனை நதி
இதன் மூலம் அழகாக காட்சியளித்த அந்த புல்வெளி பகுதி, அலங்கோலம் ஆக்கப்பட்டுள்ளது. எப்படி யமுனை நதிக்கரை நாசம் செய்யப்பட்டதோ, அதேபோல தஞ்சை பெரிய கோவில் புல்வெளி பகுதியும் வாழும் கலை அமைப்பால் அல்லோகலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தொல்லியல் துறை எப்படி ரகசியமாக அனுமதி கொடுத்தது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
தனியார் நிகழ்ச்சி
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இப்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குள் இந்து சமய அறநிலையத்துறை சிக்கியுள்ளது. ஆம்.. தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் வாழும் கலை அமைப்பு தியான நிகழ்ச்சி நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அனுமதி பெறப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பாரம்பரியமிக்க தஞ்சை கோயிலுக்குள் பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அதுவும், ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பக்தர்கள் மற்றும் தஞ்சை கோயிலின் மீது பற்று வைத்துள்ளோரிடையே கோபத்தை உருவாக்கி உள்ளது.
பல சாமியார்கள்
இதனிடையே ரவிசங்கர் குருஜி போலவே மேலும் பல சாமியார்களும் இங்கே நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி கேட்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர்களுக்கும் அனுமதி கொடுத்தால் தஞ்சை பெரிய கோயில் என்பது பாரம்பரிய சின்னமாக இருக்குமா? அல்லது பரந்துவிரிந்த ஒரு கலையரங்கமாக மாற்றப்படுமா என்ற கேள்வி பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளையே நித்தியானந்தா சாமியார், உட்பட திடீர் சாமியார்கள் பலரும், தஞ்சை கோயிலில் எங்களுக்கும் நிகழ்ச்சி நடத்த அனுமதி தர வேண்டும் என்று வந்தால் அது எவ்வளவு பெரிய சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும்? பக்தர்களிடையே எப்படி கொதிப்பை ஏற்படுத்தும்? என்பதை இந்து சமய அறநிலையத் துறையும், தொல்லியல் துறையும் புரிந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு எதிராக இன்று மதியம் ஹைகோர்ட்டில் நடைபெற உள்ள விசாரணையில் இதற்கான விடை கிடைக்கும்.