தீரன் பாணியில் திரும்பி வருவார்களா.. கிளம்பிப் போனவர்கள்.. பெருத்த எதிர்பார்ப்பில் பாமக
Recommended Video
சென்னை: பாமகவிலிருந்து விலகிப் போன தீரன் பல காலத்திற்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வைத்த வேண்டுகோளை ஏற்று அவர் திரும்பியுள்ளாராம்.
அவரைப் போலவே மேலும் பலரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர புது திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாம். அதன் முதல் கட்டமாகவே தீரன் வருகை பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் தன்னையும், தன் கட்சியையும் விட்டு பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் அழைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். இதற்கு பக்கா உதாரணம், அ.தி.மு.க.விலிருந்து மீண்டும் ராமதாஸிடம் வந்து செட்டிலாகியிருக்கும் பேராசிரியர் தீரன்.
ராமதாஸ் வலியுறுத்தி அழைத்ததால் மீண்டும் வந்துவிட்டேன் என்கிறார் தீரன். ஆக தன்னைப் பிரிந்து சென்ற பழைய நிர்வாகிகளுக்கு வெளிப்படையாகவே ராமதாஸ் வலைவிரிப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இன்னும் யாரையெல்லாம் டாக்டர் இழுக்க இருக்கிறார்? என்று விசாரித்தபோது... மக்கள் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பி.ஜே.பி.யில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், படையாச்சி பேரவை நடத்திவிட்டு பி.ஜே.பி.யில் இணைந்த ஃபெரோஸ் காந்தி ஆகியோர் உள்ளிட்ட பலரை இழுக்கிறார்களாம்.
இந்த அஸைன்மெண்டுகளை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பை திரும்பி வந்திருக்கும் தீரனிடமே ஒப்படைத்துள்ளனராம். அதை அவரும் வெற்றிகரமாக முடித்துவிட்டால் பா.ம.க.வில் இதுவரை இல்லாத பதவியான செயல் தலைவர்! எனும் பதவி உருவாக்கி கொடுக்கப்பட இருக்கிறது! என்கிறார்கள்.
நடக்கட்டும் நடக்கட்டும்!
- ஜி.தாமிரா