உறுப்பினர்கள் வரவில்லை.. தாமதம்.. குளறுபடி.. எங்கெல்லாம் தேர்தல் ஒத்திவைப்பு?
சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மறைமுகத் தேர்தலை, நடத்தியதே முறைகேடுகளில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை பறிக்கத்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் சில ஊராட்சி ஒன்றியங்களில் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. அவை எந்தெந்த பகுதிகள், என்பது தொடர்பாக, நாம் இப்போது பார்க்கலாம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய குழு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. உறுப்பினர் யாரும் வரலை என்பதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய குழு துணை தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஒன்றிய உறுப்பினர் வரவில்லை என்ற காரணத்தால், துணை தலைவர் தேர்வு நடைபெறவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கே.ஆர்.பேட் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில், துணை தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியக் குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் வருகை தரவில்லை என்பதற்காக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில், உறுப்பினர்கள் தாமதமாக வந்ததால், ஒன்றியக் குழு துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ராமநாதபுரம், பம்மனேந்தல் அதிமுக உறுப்பினர் ராஜினாமா செய்ததால், அங்கும் தேர்தல் ரத்தாகியுள்ளது. திருச்சி மாவட்டம்,
மணப்பாறை ஒன்றியக்குழு தேர்தலும், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.