போலீஸில் நியூஸ் 18 வழக்கு.. கப்சிப் ஆன யூடியூப் மாரிதாஸ்!
சென்னை: "மாரிதாஸ்" மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார்... மீடியா உலகம் அவர் மீது உச்சக்கட்ட அதிருப்தியில் உள்ளது.. இதற்கு என்ன காரணம்? யார் இந்த மாரிதாஸ்? இவர் நோக்கம் என்ன? அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் இவர் ஏன் இப்படி கல்லெறிந்து கொண்டிருக்கிறார்?
Recommended Video
மதுரையை சேர்ந்தவர் இந்த மாரிதாஸ். ஆரம்பத்தில் கம்யூனிச கொள்கை மீது பற்று கொண்டிருக்கிறார். ஆனால் அந்த கொள்கை தனக்கு ஒத்து வராது என்று நாளடைவில் உணர்ந்துதான், அன்னா ஹசாரே பக்கம் தன் கவனத்தை திருப்பினார்..
அந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மதுரையில் நடத்தி முடித்தார்.. அப்போது தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும், சோஷியல் மீடியா பக்கம் நுழைய ஆசை துளிர்த்துள்ளது.
3 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
யூடியூப் சேனல்
இப்போது மாரிதாஸ் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.. அதன் மூலம் கொஞ்சம் ஃபேமஸும் ஆகி வருகிறார்.. இவர் ஒரு அறிவியல் புரொபசர் என்று சில தகவல்கள் சொல்கின்றன. ஆனால் ஏனோ தெரியவில்லை திராவிட, தமிழ் தேசியவாத அமைப்பினரின் உணர்வுகளை சீண்டுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக, "சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான திமுகவின் நிலைப்பாடு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் திமுகவிற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம்" என்ற உச்சக்கட்ட அபாய கருத்தை அசால்ட்டாக கூறியதே இதற்கு உதாரணம்.
கட்டுக்கதைகள்
50 வருடமாக ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைத்த மக்களையே தவறு என்கிறார். கூடவே நிறைய கட்டுக்கதைகளை அவிழ்த்தும் வருகிறார். இது எல்லாவற்றிற்கும் மேலாக மதரீதியில் பிரச்சனைகளைக் கிளப்பக் கூடிய கருத்துகளை பரப்புவதையும் தன் ஆயுதமாக கொண்டுள்ளார். கூடவே ஊடகங்களை கீழ்த்தரமாக பேசுவதும் சில சேனல்களையும் அதில் பணியாற்றுவோர் குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்புவதும் என்ற புதிய யுத்தியை இப்போது கையில் எடுத்துள்ளார்.
நியூஸ் 18
உலகமே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் விஷயத்தில் பம்மிக் கொண்டு ஒதுங்கிய இந்த மாரிதாஸை நோக்கி கேள்விகள் பாயவே, அதை திசை திருப்பும் விதமாக அவர் கையில் எடுத்த ஆயுதம் "ஊடகங்கள்".. திமுகவுக்கு எல்லாரும் விலை போய்விட்டார்கள் என்ற வாதத்தை முன்வைத்து, நியூஸ் 18 குணசேகரன் முதல் குறி வைத்து குற்றஞ்சாட்டினார். வழக்கமாக, திமுகவை மாரிதாஸ் குறை சொன்னால், அதை அக்கட்சி முறைப்படி எதிர்கொள்ளும், சட்டப்படி அணுகும்.
மெயில்
ஆனால், இப்போது அப்படி இல்லை.. நேரடியாக மீடியாவிடமே தெரியாமல் மோதிவிட்டார் மாரிதாஸ்.. ஆனால் நியூஸ் 18 இதற்கு எதிரான முதல் சாட்டையை கையில் எடுத்துள்ளது. மாரிதாஸ் வாய் வலிக்க வலிக்க கிராப் போட்டு பேசியதெல்லாம் சரிதான்.. ஆனால் நியூஸ் 18 தலைமை நிர்வாக அதிகாரி தனக்கு மெயில் அனுப்பி, "ஆமா நீங்க சொன்னதெல்லாம் சரி தான்" என்று கூறியதாக அவர் போட்ட ஸ்கிரீன்ஷாட்தான் அவருக்கு வினையாக அமைந்து விட்டது. நியூஸ்18-ல் பணியாற்றி வரும் ஊழியர்கள் குறித்து அதன் தலைமையகத்திற்கு இ-மெயில் மூலம் குற்றச்சாட்டுகளை அனுப்பி வைத்துள்ளதாக வீடியோ மூலம் மாரிதாஸ் தெரிவித்தார்.
முதல் வெற்றி
நியூஸ்18 இணையதளத்தின் செய்தி ஆசிரியர் வினய் சாரவாகி தனக்கு இ-மெயில் அனுப்பியிருப்பதாக கூறியிருந்தார். அதில் தன்னுடைய குற்றச்சாட்டுகளை நியூஸ்18 நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக மாரிதாஸ் பரபரப்பைக் கிளப்பினார். இந்த விஷயத்தை நியூஸ்18 விவகாரத்தில் தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வெட்ட வெளிச்சம்
ஆனால் வினய் சாரவாகியின் ட்விட்டர் பதிவு அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டது. அதாவது, தான் அப்படியொரு இ-மெயிலை அனுப்பவில்லை என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் வினய் சாரவாகி யார் என்று கூட தெரியாமல், நியூஸ்18 குழுமத் தலைவரிடம் புகார் தெரிவித்ததாக மாரிதாஸ் கூறிய பொய்கள் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றன.
புகார்
அவதூறு பரப்புவது, ஃபோர்ஜரியாக கடிதம் தயாரித்து வெளியிட்டது, பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி மத மிரட்டல் விடுப்பது, நல்லிணக்கத்தை குலைத்து சமூகத்தில் மோதலை உருவாக்குவது, இந்துக்களை பிற மதத்தினருக்கு எதிராகத் தூண்டிவிடுவது, நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் மாரிதாஸ் மீது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் சட்ட ரீதியிலான புகார் அளிக்கப்பட்டுள்ளது. எப்போது நியூஸ் 18 ஸ்டேஷன் வரை புகார் கொண்டுபோனதோ, அப்போதே மாரிதாஸ் ஆஃப் ஆகிவிட்டார்.. அதற்கு பிறகு ஜால்ராக்கள் சத்தமும் சோஷியல் மீடியாவில் கேட்கவில்லை. நிசப்தம் சூழ்ந்துள்ளது.
ஜனநாயகம்
இது ஒரு ஜனநாயக நாடு.. எல்லாரும் இப்படித்தான், அதிலும் ஒத்த கருத்துடன் ஒரே மாதிரி தான் இருக்கவேண்டும் என்று நினைக்க முடியாது. தனிப்பட்ட கருத்து, விருப்பு, வெறுப்புடன்தான் நாடு பயணித்து வருகிறது. மாரிதாஸ் போன்றவர்கள் வரலாறு நெடுகிலும் இருந்திருக்கிறார்கள். தனது கருத்தை தெரிவிக்க மாரிதாசுக்கும் முழு உரிமை உண்டு, மற்றவர்களுக்கும் அதே அளவு உரிமை உண்டு. இதை மாரிதாஸ்கள் உணர்வதே ஜனநாயகத்துக்கு நல்லது!!