6 மாசத்துல மெரினா பீச்.. உலக தரம் வாய்ந்த பீச்சாக மாறணும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: 6 மாதத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி,சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், பின்னர் அங்குள்ள மீன் கடைகளை ஒழங்குபடுத்தி மீன் சந்தைக்கு மாற்றப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்..
இதனையடுத்து, மெரினா கடற்கரை வணிக தளம் அல்ல என தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை மக்களுக்கானது என தெரிவித்தனர். மேலும், அடுத்த 6 மாத காலத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.இதற்காக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முழு சுதந்திரம் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
2019ம் ஆண்டின் உலகின் சிறந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில்.. சென்னை உள்பட 7 இந்திய நகரங்கள்
அதேபோல, கடற்கரை சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள கடைகள் கடற்கரையின் அழகை மறைக்கும் வகையில் இருப்பதால் அவற்றை கடற்கரை நோக்கி நேர்நிலையாக அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்..
லூப் சாலையில் மீன் சந்தை கட்டும் போது அங்குள்ள மீன் கடைகளை ஒழுங்குப்படுத்தும் பணிகளை தொடங்க அறிவுறுத்திய நீதிபதிகள், விதி மீறுபவர்களை தேவைபட்டால் கட்டாயபடுத்தி அகற்றலாம் என்றும் தெரிவித்தனர். கடற்கரையில் உள்ள உணவு கடைகள் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் அவற்றை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
மேலும், கடற்கரை கடைகளை நேர்நிலையாக மாற்றி அமைப்பது குறித்தும், மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்தும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.