3 மாநகராட்சிகளில்.. நாளை மட்டும் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, மதுரை, கோவையில் நாளை ஒருநாள் கடை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது
சென்னை: சென்னை, மதுரை, கோவையில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடை திறக்கலாம் என்று தமிழக அரசு அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதேசமயம் மே 1-ம் தேதி முதல் காலை 6 மணி முதல் 1 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது!
Recommended Video
இன்று தலைமை செயலகத்தில் கலெக்டர்களுடன் முதலமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.. அப்போது, அவர் பேசும்போது, அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கை எடுத்து வரும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் என் பாராட்டுக்கள்.. ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்... கொரோனா தொற்றில்லாத கிருஷ்ணகிரி மாவட்டங்களில் படிப்படியாக தொழில்கள் தொடங்கலாம்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். 100 நாள் பணியாளர்கள் 55 வயதுக்கு மேல் இருந்தால் அவர்களை தவிர்க்க வேண்டும்... கொரோனாவால் பாதிக்கப்படாத பச்சைப் பகுதிகளில் தொழில்கள் இயங்க அனுமதிக்கலாம்.
கிடங்கில் வைக்கப்படும் விளை பொருட்களின் மதிப்பில் பாதி அளவை விவசாயிகளுக்கு கடனாக தரலாம்.. மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் முறையாக வழங்குவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார். இறுதியாக, காய்கறி , மளிகை கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்ற ஆதங்கத்தையும் முதல்வர் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், சென்னை, மதுரை, கோவை நகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் வாங்க ஏதுவாக கடை இயங்கும் நேரத்துக்கு நாளை மட்டும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மே 1 முதல் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் 1 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 4 நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது... இன்று 4-வது நாள்.. 4 நாள் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் நாளை மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது... இதில் தொற்று அதிகம் பாதித்த சென்னை மாநகரம்தான்.. 4 நாளைக்கு முன்பு ஒருநாள் 3 மணி வரை அனுமதி தந்ததற்கே இப்போதுவரை கோயம்பேடு நெரிசல் பேசுபொருளாக உருவெடுத்து வரும்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பானது சென்னையில் எப்படி அமலாகப் போகிறது என்பது எதிர்பார்ப்பாக எகிறி உள்ளது!!