திருவள்ளுவரை இழிவுப்படுத்தியதாக பாஜக மீது குற்றச்சாட்டு.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை: திருவள்ளுவருக்கு காவி உடையும் திருநீர் பூச்சும் அணிவித்து இழிவுப்படுத்துவதாக பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் அதிகாரப்பூர்வ பிஜேபி தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியானது. அதில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல இருந்தது. இது தொடர்பாக கண்டன அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறுகையில் திருவள்ளுவர் படத்தில் அவருக்கு காவி உடையும் திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள். திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த காலத்தில் திருவள்ளுவரை கொண்டாடிய பலரும், அவரை ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றது கிடையாது. பாஜகவுக்கு சொந்த பெருமிதங்களும் வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில் பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை.. சர்ச்சையில் சிக்கிய தமிழக பாஜக.. கடும் கொந்தளிப்பு!