மார்ட்டின் உதவியாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட ஹைகோர்ட் மறுப்பு - மாஜிஸ்திரேட் விசாரணை
மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள் மறுத்து விட்டனர். மாஜிஸ்ரேட் விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடமே குடும்பத்தினர் அணுகலாம் என அறிவுறுத்தினர். பழனிசாமியின் மகன் ரோகின்குமார் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வரை 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் கேசியராக பணிபுரிந்து வந்த கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். கடந்த மே 3ஆம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பழனிசாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரி பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் வருமான வரித்துறை சித்ரவதை காரணமாகவே தந்தை மரணம் அடைந்ததாகவும் தமது தந்தை உடலில் காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மனுவில் ரோஹின்குமார் புகார் அளித்திருந்தார். மேலும் தந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பழனிசாமி உடலை தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை வைத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று புதன்கிழமை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமியின் பிரேத உடலின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிரோடு இருக்கும்போதே ஏற்பட்டதா அல்லது அவர் இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா என சந்தேகம் எழுப்பினர். பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தண்ணீர் குட்டையில் மூழ்கி இருந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயங்கள் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக இன்று முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை காரமடை காவல் நிலையத்தில் இருந்து கோவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றிய நீதிபதிகள், சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட மறுப்பு தெரிவித்தனர். பழனிசாமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் நேரில் ஆய்வு செய்யவும் பழனிசாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமா என மாஜிஸ்திரேட் முடிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
பதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலைப் பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால் பழனிச்சாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.