உங்க உத்தரவுக்கு என்ன மரியாதை? பள்ளிக்கல்வித் துறை அதிகாரியிடம் நியாயம் கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூ.!
சென்னை: பள்ளி வளாகங்களில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தடை உள்ள நிலையிலும், சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டம் நடந்தது எப்படி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்,இது தொடர்பாக நியாயம் கேட்டு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகனிடம் நேரிலும் முறையிடப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரிடம் வழங்கப்பட்ட மனு விவரம் வருமாறு;
ஜெயகோபால் கரோடியா பள்ளி
''சென்னை அண்ணாநகர், ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 2022 நவம்பர் 26, 27 தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையில் 40க்கும் மேற்பட்ட சங்பரிவார அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தது. இச்சூழலில், "பள்ளி வளாகங்கள் குறிப்பிட்ட அரசியல் மற்றும் மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. விதிகளை மீறி அவற்றை நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகை செய்கிறது" என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ''
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
''இந்த செய்தி ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் உத்தரவுக்கு மாறாக, சட்டவிரோதமான முறையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையில் 40 இந்து மத அடிப்படைவாத இயக்கங்கள் சென்னை, அண்ணாநகர், ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கூடி தங்களது அமைப்பின் செயல்திட்டங்கள் குறித்து இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.''
பள்ளிக்கல்வி இயக்ககம்
''பள்ளிக்கல்வி இயக்ககத்தின் உத்தரவையும் வழிகாட்டுதலையும் மீறி மத அடிப்படைவாத அமைப்புகள் தங்களது செயல்திட்டத்தை உருவாக்க பள்ளி வளாகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதித்த சென்னை, அண்ணாநகர், ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகத்தின் மீது தாங்கள் உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.''
மத அடிப்படைவாத அமைப்புகள்
''மேலும் வரும் காலங்களில் இதுபோன்று மத அடிப்படைவாத அமைப்புகள் பள்ளி வளாகத்தை பயன்படுத்துவதை உறுதியாக தடுப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் தங்கள் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.''