தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நிபந்தனைகளுடன் பொதுப் போக்குவரத்தை படிப்படியாக இயக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இ-பாஸ் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை... மக்களை அலைக்கழிக்கத்தான் இது பயன்படுகிறது -சரவணன் எம்.எல்.ஏ
மன உளைச்சல்
வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், பணி நிமித்தமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்ற வியாபாரிகள், தினக்கூலி உழைப்பாளிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த ஊர்களுக்கு திரும்ப செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அதேபோல் சொந்த ஊர்களில் உள்ள வயதான, சிகிச்சை பெறும் பெற்றோரை, அவ்வப்போது சென்று கவனிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
பொதுமக்கள் வேதனை
இறுதிச் சடங்குகளுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றால், இறப்புச் சான்று கட்டாயம் என்று உள்ளது. துக்க வீடுகளில் உள்ளவர்கள் உடனடியாக இறப்புச் சான்று பெற்று அனுப்பி வைக்க இயலாது. இதனால் பலர் துக்க நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய, நியாயமான காரணங்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய காரணங்களுக்காக பயணிக்க இ-பாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் தவிக்கின்றனர்.
குற்றச்சாட்டு
அதேநேரத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஆவணம் இல்லாவிட்டாலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஏழை, நடுத்தரமக்கள் நியாயமான காரணங்களுக்கு ஆவணத்துடன் விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதில் ஊழல் - முறைகேடுகள் நடப்பதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
முழு ஊரடங்கு
ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு என்ற நிலையால், சனிக்கிழமைகளில் அதிகப்படியான மக்கள் பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர். எனவே, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தளர்த்த வேண்டுமெனவும்; பிற நாட்களில் கடைபிடிக்கப்படும் விதிகளையே ஞாயிற்றுக் கிழமையும் அமலாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
படிப்படியாக தொடங்குக
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தினக்கூலி தொழிலாளர்கள், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும் சாதாரண ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் தங்களது அவசியத் தேவைகளுக்காக நகரங்களுக்கோ அல்லது வெளியூர் செல்வதற்கோ பொதுப்போக்குவரத்து இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சில நிபந்தனைகளுக்குட்பட்டு படிப்படியாக பொதுப் போக்குவரத்தை துவக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.