தனியார் வங்கிகளுக்கு கடிவாளம் தேவை... ரிசர்வ் வங்கியை மதிக்காமல் கடன் வசூலிப்பு.. சி.பி.எம். கண்டனம்
சென்னை: கொரோனா காலத்தில் கடன் தவணையை திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி உரிய கால அவகாசம் அளித்துள்ள நிலையில் தனியார் வங்கிகள் தாந்தோன்றிதனமாக நடந்துகொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமை தலைதூக்கியுள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு... சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு சரத்குமார் கடிதம்..!
அசலை விட வட்டி அதிகம்
தஞ்சாவூர் அருகே, வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு ஆனந்த் என்ற இளைஞர் நேற்று தீக்குளித்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. வெல்டரான ஆனந்த், வீடு கட்ட தனியார் வங்கியிடம் கடன் பெற்று அசலை விட அதிகமான தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனாலும் வங்கி அதிகாரிகள் மீதத் தொகையினை கட்டுமாறு மிரட்டியுள்ளனர்.
தனியார் வங்கி ஊழியர்கள்
இந்நிலையில், ஆக.27 அன்று வங்கி அதிகாரிகள் ஆனந்த் வீட்டுக்கு நேரில் சென்று அங்கிருந்த அவரது மனைவி ஹேமாவிடம் வட்டியுடன் முழுத் தொகையும் செலுத்தாவிட்டால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். கடன் தவணையைக் கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டும் வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டதால், வங்கி வாசல் முன்பு ஆனந்த் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.
அவமானம்
தமிழ்நாட்டில் கந்து வட்டிக் கொடுமை கொடி கட்டி பறக்கிறது. இக்கொடுமை தாங்காமல் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே புதுக்கோட்டை, திருநெல்வேலி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கந்து வட்டிக் கொடுமையால் சிக்கித் தவிப்பவர்கள் தங்களது சொத்துக்கள், உடமைகள் ஆகியவற்றை இழந்து தவித்து வருவதோடு, வீட்டிலிருக்கும் பெண்கள், சிறுமிகள் என அனைவரையும் கந்துவட்டிக்காரர்கள் அடியாட்களை நியமித்துத் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடன் வசூலிப்பு
கரோனா காலத்தில் இ.எம்.ஐ., கடன்கள், நுண்நிதி கடன்கள், கிரெடிட் கார்ட் கடன்கள் போன்றவற்றை வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை காலில் போட்டு மிதித்துக் கொண்டு அடியாட்களை வைத்து மிரட்டி கடன் வசூலை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகளுக்குத் தூண்டப்படுகின்றனர்.
இயல்பு நிலை இல்லை
கரோனா முடிந்து இயல்பு நிலை திரும்புகிற வரை நுண்நிதி கடன், சுயஉதவிக்குழு கடன், இ.எம்.ஐ., கிரெடிட் கார்ட் கடன் தவணை, வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் வசூலையும் ஒத்தி வைக்க வேண்டும். மேலும், இக்காலத்திற்கான வட்டித் தொகையினையும் ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.