மறைப்பதற்கு ஏதும் இல்லை.. திமுகவிடம் ரூ10 கோடி நிதி பெற்றதாக வெளியான செய்திக்கு மார்க்சிஸ்ட் பதில்
சென்னை: திமுகவிடம் ரூ10 கோடி தேர்தல் நிதி பெற்றதாக வெளியான செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விளக்கம் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) என இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் சேர்த்து 25 கோடியை தேர்தல் நன்கொடை அளித்தாகவும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு ரூ15 கோடியும் வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் திமுக கணக்கு சமர்ப்பித்தது. இது தொடர்பாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடிரூபாயும் தேர்தல் நன்கொடையாக திமுக வழங்கியதாகவும் ஆங்கில ஊடகத்தில் செய்தி வெளியாகி இருந்தது.இருப்பினும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் செலவு தொடர்பான தங்களின் பிரமாண பத்திரத்தில் இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
கட்சியின் மாண்பை குலைக்க
இந்நிலையில் நன்கொடை தொடர்பான செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ (எம்))மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த கட்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிபிஐ (எம்) இன் தேர்தல் நிதி மற்றும் செலவு குறித்து ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது, கட்சியின் மாண்பினை குலைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பொய்யான விவரங்களேயன்றி வேறல்ல.
மறைக்க ஒன்றும் இல்லை
ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மாறாக, லோக்சபா தேர்தல் சமயத்தில், எங்கள் கட்சியால் பெறப்பட்ட அனைத்து நன்கொடைகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் பங்களிப்பு குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதில், ஊடகச் செய்திகளில் தவறாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதைப் போல மறைப்பதற்கு ஏதும் இல்லை.
அனைத்து விவரமும் உள்ளது
இரண்டாவதாக, தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள கணக்குகள் குறித்த அறிக்கையானது, தேர்தலின் போது கட்சியால் செய்யப்பட்ட அனைத்து செலவினங்களையும் பற்றிய விவரங்களை கொண்டுள்ளது. எனவே ஊடகச் செய்திகளில் கட்சி செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள ‘தொகை' என்பது முற்றிலும் திரித்துக் கூறப்பட்ட ஒன்றாகும்.
தாராளமாக பார்க்கலாம்
இந்த அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் கணக்குகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும்போது சரிபார்த்துக் கொள்ளலாம்" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துள்ளது.