வேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
சென்னை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் நேற்று (17.7.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், அவர் அமோக வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள். இதன் தொடர்ச்சியாகவே வேலூர் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள மோடி தலைமையிலான ஆட்சி மக்கள் விரோத திட்டங்களை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது.
புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மக்களின் கல்வி உரிமையை பறிக்க திட்டமிடப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை, ஒரே மின்சாரம் என மாநிலங்களின் உரிமையைப் பறிக்கவும், மக்கள் நல திட்டங்களை கெடுக்கவும் மோடி அரசு திட்டமிடுகிறது.
மோடி ஆட்சியை தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலில் முற்றாக நிராகரித்தார்கள். மத்தியில் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் குரலை நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கச் செய்வது அவசியம். வேலூர் மக்களவையிலிருந்து திமுக வெற்றி பெற்று செல்வது இதற்கு பெரிதும் உதவும்.
மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சி மத்திய பாஜக ஆட்சியின் பினாமி போலவே செயல்படுகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் மாநில ஆட்சியாளர்கள் துணை நிற்கிறார்கள். வேலூர் மக்களவைத் தேர்தலிலும் இந்த கூட்டணிக்கு தகுந்தபாடம் புகட்டியாக வேண்டும்.
வேலூர் திமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய முழுமையான களப்பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், பி.செல்வசிங், என்.குணசேகரன், மாவட்ட செயலாளர் எஸ். தயாநிதி ஆகியோர் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் கட்சியின் மாநிலத்தலைவர்கள் விரிவான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் வெற்றிக்கு களப்பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.