விஸ்வரூபம் எடுக்கிறது "மாஸ்க்" மார்க்கெட்... மாஸ் வசூலைக் குவிக்க தயாராகும் இந்தியா!
சென்னை: கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் புதிய மார்க்கெட் ஒன்று உதயமாகியுள்ளது.. அதுதான் முகக் கவசம் (Mask) தயாரிப்பு. இந்தியாவில் இது மிகப் பெரிய பிசினஸாக உருவெடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Recommended Video
இப்போதே திருப்பூரில் மாஸ்க் தயாரிப்பு சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டதாம். பல கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்களும் குவிந்துள்ளதாக சொல்கிறார்கள். ஜவுளி "ஹப்"கள் அனைத்திலுமே தற்போது மாஸ்க் தயாரிப்புதான் புதிய தொழிலாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சுறுசுறுப்புக்கு பெயர் போன மாநிலம். ஏதாவது டிரெண்ட் என்றால் இங்குதான் வேகமாக பிக்கப் ஆகும். அந்த வகையில் இந்த மாஸ்க் பிசினஸ் இப்போது தமிழகத்தில் படு வேகமாக பிக்கப் ஆகியுள்ளதாக சொல்கிறார்கள்.
ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்.. அரசு பரிசீலனை.. முதல்வர்
1200 நிறுவனங்கள்
திருப்பூரில் மட்டும் கிட்டத்தட்ட 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாஸ்க் தயாரிப்பு வேகம் பிடித்துள்ளதாம். அவர்களுக்கு வந்துள்ள ஆர்டர் மட்டும் ரூ. 250 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது திருப்பூரில் மட்டும்தான். இதேபோல ஈரோடு உள்ளிட்ட ஜவுளித்தொழிலில் முன்னோடியாக தொழில் நகரங்களையும் சேர்த்தால் பல நூறு கோடிகளுக்கு மேல் இந்த பிசினஸ் போகும் என்பதை ஊகிக்கலாம்.
மாஸ்க் அவசியம்
கொரோனா வந்த பிறகு நமது வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டது. வெளியில் போனால் மாஸ்க் அவசியம் என்ற நிர்ப்பந்தம் நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவதால் ஏகப்பட்ட உடல் நலக் கேடுகள் வரும் என்று சொல்லப்பட்டாலும் கூட இப்போது மாஸ்க் அணியாமல் போனால் என்னாவது என்ற அச்ச உணர்வும் மக்களை, மாஸ்க்கும் கையுமாக நடைபோட வைத்துள்ளது.
விஸ்வரூப பிசினஸ்
எதிர்காலத்தில் பொது இடங்களில் நடமாடும்போது கண்டிப்பாக மாஸ்க் போட்டுக் கொண்டுதான் நாமெல்லாம் போக வேண்டி வரும் போல. எனவே இதையெல்லாம் ஊகித்து மிகப் பெரிய அளவில் மாஸ்க் தயாரிப்பு பிசினஸ் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. சாதாரண மாஸ்க்கில் ஆரம்பித்து டிசைனர் மாஸ்க் வரை நம்மாட்கள் போய் விட்டனர். ஒரு காலத்தில் 5 ரூபாய்க்குள் கிடைத்த மாஸ்க் எல்லாம் இன்று 25, 50 ரூபாய்க்கு எகிறி விட்டன.
கை கொடுக்கும் மாஸ்க் தொழில்
கொரோனா தாக்கத்ததால் வெளிநாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்த பெரிய பெரிய ஜவுளி ஆர்டர்கள் எல்லாம் நின்று போய் விட்டதால் நம்மவர்கள் மிகவும் தடுமாறிப் போய் விட்டனர் என்பது உண்மைதான். இதிலிருந்து மீள இப்போது மாஸ்க் தயாரிப்புதான் கை கொடுக்க ஆரம்பித்துள்ளதாம். கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் நகரங்களிலும் மாஸ்க் தயாரிப்புதான் அதிகமாக நடைபெறுகிறது.
மிகப் பெரிய பிசினஸாக மாறும்
இந்த பிசினஸ் எதிர்காலத்தில் உலக அளவில் மிகப் பெரிய தொழிலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு இத்துறையில் தனி இடம் கிடைக்கும் என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டனர். தொழில்துறைக்கு கிடைத்த திடீர் வரப் பிரசாதம் இந்த மாஸ்க் தயாரிப்பு என்று பிரபல ரேமான்ட் நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் ராம் பட்நாகர் கூறியுள்ளார். மாஸ்க் துறைக்கு இப்படி ஒரு பிரேக் கிடைக்கும் என்று யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பது அவரது கருத்தாகும்.
மாஸ்க் தயாரிப்பில் ஆலன் சோலி
இந்தியாவில் மாஸ்க் தயாரிப்பு துறையானது ரூ. 10,000 முதல் 12,000 கோடி அளவிலான மார்க்கெட்டாக உருவெடுக்கும் என்றும் பட்நாகர் கணித்துள்ளார். அதேசமயம், இது பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார். பிரபலமான ஷாப்பர்ஸ் ஸ்டாப், பேப்இந்தியா, விஐபி குளோத்திங், ஜோடியாக், ஆதித்யா பிர்லா பேஷன், பீட்டர் இங்கிலாந்து, ஆலன் சோல்லி, லூயிஸ் பிலிப், வான் ஹியூசன் ஆகியோர் டிசைனர் மாஸ்க்குகளை விற்பனைக்கு இறக்க ஆரம்பித்துள்ளனர்.
சிறு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி
தமிழகத்திலும் கூட மாஸ்க் தயாரிப்புத் தொழில் விஸ்வரூபம் எடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறு தொழில் புரிவோருக்கு இந்த மாஸ்க் தயாரிப்பு பெரும் நிவாரணமாக வந்து சேர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சிறு சிறு தையல் கலைஞர்களும் கூட இந்த மாஸ்க் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். பொருளாதாரம் நசிந்து போயுள்ள நிலையில் குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கு இந்த மாஸ்த் தயாரிப்புத் தொழில் பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
முன்பெல்லாம் ஜவுளிக் கடைக்கு போனால் எல்லாத் துணியையும் வாங்கி விட்டு கடைசியாக ஜட்டி, பனியன், கர்ச்சீப் வாங்குவது வழக்கமாக வைத்திருப்போம். இனிமேல் இந்த மாஸ்க்கையும் அந்த லிஸ்ட்டில் சேர்க்க வேண்டியதுதான்.. மாற்றம் ஒன்றே மாறாதது.