மாதவரத்தில் பெரும் தீ விபத்து.. பல மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்.. ரூ.100 கோடி நஷ்டம்
சென்னை: சென்னை, அடுத்த மாதவரம் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ, 6 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ரசாயனம் எரிந்து சாம்பலானது.
Recommended Video
பெரும், கரும் புகை மூட்டம் எழுந்ததால், அந்த பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஒரு ரசாயன கிடங்கு செயல்பட்டு வந்தது. இன்று மாலை, அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ அருகே நின்று கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பழைய லாரிகள் மீதும் பரவியது.
இதனால் அந்த பகுதி முழுவதுமே தீ பரவியது. எனவே, பெரும் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்து, முதலில் 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை.
இதையடுத்து, மொத்தம் 15 வாகனங்களில் சென்று வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் இந்த பணியில் ஈடுபட்டபோதிலும் கூட, தீயை அணைக்க முடியாமல் திணறினர். இதற்கு காரணம், இது ரசாயனத்தில் இருந்து பரவிய தீ.
ரசாயனம் என்பதால் வெறும் தண்ணீருக்கு தீ அணையவில்லை. ஊற்ற ஊற்ற எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திர பாபு, நகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்து, தீயை அணைக்க, கிரேன்களை கொண்டு வந்து அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்க ஏற்பாடு செய்தனர்.
தீ பிடித்த இடத்தில் இருந்தது மருந்துகள் தயாரிக்கும் ரசாயனம் என்பது தெரியவந்துள்ளது. உரிமையாளரிடம் விசாரணை நடத்தி, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தீயணைக்கும் பணிகள் நடந்தன.
6 மணி நேரத்திற்கும் மேலாக போராடிய நிலையிலும், இரவு 10 மணி நிலவரப்படி, முழுமையாக தீ அணையவில்லை. ஆனால், விரைந்து தீயை அணைத்துவிடுவோம் என தீயணைப்பு வீரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பகுதிகளில் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மிகக் கடுமையான கரும் புகை மூட்டம் எழுந்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.