மகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்!
சென்னை: விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஜுனியர் விஜய் சேதுபதி ரோலில் மிரட்டிய மாஸ்டர் மகேந்திரன், ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி.
Recommended Video
90'ஸ் கிட்ஸ் தங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரேமுறையேனும் இவரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 'அந்த புள்ளைக்கும் உன் வயசு தான இருக்கும்.. இந்த வயசுல-யே எவ்ளோ கருத்தா பேசுது, அருமையா நடிக்குது பாரு... நீயும் தான் இருக்குறியே எரும' என்று இவரால் பல 90'ஸ் கிட்ஸ் தங்கள் பெற்றோர்களிடமிருந்து அன்பு வார்த்தைகளை கேட்டிருக்க முடியும்.
அவர் மாஸ்டர் மகேந்திரன்.
ஆம்! 'மாஸ்டர்' படத்தில் இளம் வயது பவானியாக நடித்திருந்த மாஸ்டர் மகேந்திரனின் காட்சிகள் திரையில் 10 நிமிடமே தோன்றினாலும், அவரது சினிமா வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.
தனது இத்தனை வருட சினிமா தாகத்தை, கோபத்தை, ஏமாற்றத்தை, அவமானங்களை ஜுனியர் பவானி ரோலில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
மாஸ்டர் எனும் அவரது அடைமொழிக்கு 'குட்பை' சொல்லி மகேந்திரன் எனும் அடையாளத்துக்கு இட்டுச் சென்ற மாஸ்டர் படம் குறித்தும், அவரது கரியர் குறித்தும் சில கேள்விகளை நமது ஒன் இந்தியா தமிழ் சார்பாக அவர் முன்வைத்தோம்.
3 வயதில் நடிக்கத் தொடங்கி 6 மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடிச்சிருக்கீங்க. பல விருதுகள் வாங்கியிருக்கீங்க. வேறு எந்த எந்த குழந்தை நட்சத்திரமும் எட்டாத சாதனை இது. உங்களின் கடந்த கால பாதையை கொஞ்சம் நினைவு கூற முடியுமா?
இது தான் என்னுடைய பெரிய சொத்து ப்ரோ. நான் கொஞ்சம் வெளிப்படையாவே இந்த இன்டர்வியூல பேசலாம்-னு இருக்கேன். மனசுல இருந்து சொல்றேன்.
எல்லோரும் என்கிட்ட, 'என்ன நீ இன்னும் வீடு வாங்கல.. ஒரேயொரு சின்ன கார் தான் வச்சிருக்க.. என்ன பண்ண போற நீ?-னு கேப்பாங்க. அவங்க எல்லோர்கிட்டயும் நாம் ரொம்ப பெருமையா சொல்ல நினைக்கிற வார்த்தை என்னனா, 'நா இத்தனை படங்கள் பண்ணிருக்கேன். இத்தனை மக்களை சம்பாதிச்சிருக்கேன். நானே நாளைக்கு அழிஞ்சாலும், என் படங்கள் எதுவும் அழியாது. இதைவிட வேறு என்ன சொத்து எனக்கு வேணும்?'
நான் உண்மைலயே Blessed தான் ப்ரோ.
மாஸ்டர் படத்தில் ஜுனியர் பவானியா நடிக்க உங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? நீங்கதான் நடிக்கிறீங்க-னு உறுதியான பின் அந்த மொமண்ட் எப்படி இருந்தது?
கேள்வியைக் கேட்டவுடனேயே சற்று எமோஷனான மகேந்திரன், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, 'நான் என்னோட ஒரு தெலுங்கு படத்தின் டிரைலர் லான்ச் வேலைல இருந்தேன். அப்போ எங்க பட டீம்ல, விஜய்சேதுபதி நம்ம டிரைலர லான்ச் பண்ணா நல்லா இருக்கும்-னு சொன்னாங்க. அப்போ, விஜய் சேதுபதி அண்ணா 'Sye Raa Narasimha Reddy'-னு சிரஞ்சீவி சார் தெலுங்கு படத்தில் நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அதனால், தெலுங்கு-ல அவருக்கு நல்ல ரீச் இருந்துச்சு. ஸோ, நா உடனே அண்ணனுக்கு போன் பண்ணேன்.
எப்பவும் போல 'ஒன்னும் பிரச்சனை இல்ல.. வாடா'-னு சொன்னாரு. உடனே அவர் ஹைதராபாத்-ல ஷூட்டிங்-ல இருந்த இடத்துக்கே நேரடியா போய்ட்டேன். அங்க போய் நா அவரை பார்த்தப்போ, என்ன நினைச்சாரு-னு தெரியல... என்னை பச்ச பச்சயாய் திட்ட ஆரம்பிச்சுட்டார்.
'என்ன மகேந்திரன் பண்ணிக்கிட்டிருக்க லைஃப்-ல நீ? இதுக்கு முன்னாடி உன்னோட சினிமா-ல நீ எவ்ளோ சாதிச்சிருக்க தெரியுமா? அந்த மகேந்திரன் எங்க? லைஃப்-ல 30 வயச நெருங்கிட்ட. உன்னோட வாழ்க்கையில பாதியை கடந்துட்ட. எப்போ நீ ரெடியாக போற? எதுக்காக நீ வெயிட் பண்ணிட்டிருக்க?-னு அடுத்தடுத்து கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டார்.
ஆனா, உண்மையிலே அவர் கேட்ட எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்ல. ஆனா, நா ஒரேயொரு பதில் மட்டும் சொன்னேன்.
'அண்ணா.. நா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கேன். ஆனா, வாய்ப்பு தான் வர மாட்டேங்குது. என்னை நம்பி யாரும் வாய்ப்பு தர மாட்டேங்குறாங்க. எங்க போனாலும், 'இவரு மாஸ்டர் மகேந்திரன்.. சைல்ட் ஆர்ட்டிஸ்ட்-னு தான் என்னை அடையாளப்படுத்துறாங்க' சொன்னேன்.
கொஞ்ச நேரத்துல அவர் 'இருடா வரேன்னு' ஷூட்டிங் போயிட்டார். அப்போ சேது அண்ணாவோட மச்சான் ராஜேஷும் அங்க தான் இருந்தார். சேதுண்ணா ஷூட்டிங் போனப்புறம் அவர் என்கிட்ட, 'சேது உங்க மேல அவ்ளோ அன்பு வச்சிருக்காரு. கண்டிப்பா நீங்க ஏதாச்சும் செய்யணும் மகேந்திரன்'-னு சொன்னார்.
கேஷுவலா அப்படியே பேசிக்கிட்டே இருந்தப்போ, 'தளபதி 64ல சேதுண்ணா நடிக்கிறார்-னு சொல்றாங்களே. அது உண்மையா?' அப்படின்னு கேட்டேன். அவரும் என்ட்ட, 'ஆமாமா.. அது கன்ஃபார்ம் தான் மகேந்திரா. ஷூட்டிங் ஆரம்பிக்கப் போகுது. நீங்க ஏன் ஒரு தடவ லோகேஷ்ஷ பார்க்க-க் கூடாது?-னு கேட்டார்.
முதன் முதல்ல மாஸ்டர் பயணத்துல நான் இடம்பிடிக்க அவரோட அந்த ஒரு கேள்வி தான் காரணமா இருந்துச்சு.
கொஞ்ச நாள் கழிச்சு என்னைப் பத்தி லோகேஷ் அண்ணா கிட்ட ராஜேஷ் பேசும் போது, 'அவரோட திறமை பெருசு. அவரை சும்மா கூப்ட்டு வந்து ரெண்டு பிரேம்ல நிக்க வச்சா தப்பாயிடும். என்னால் அப்படி பண்ண முடியாது. எல்லா நடிகர்கள் தேர்வும் இறுதியாயிடுச்சு'-னு லோகேஷ்-ண்ணா சொல்லி இருக்கார்.
இருந்தாலும் எங்களுக்குள்ள ஜஸ்ட் ஒரு ஃபார்மல் மீட் ஒன்னு அரேஞ் ஆச்சு. ஆனா, அந்த மீட்டிங்குக்கு முன்னாடி லோகேஷ் அண்ணா, தன்னோட ஒட்டுமொத்த டீமோட என்னைப் பத்தி டிஸ்கஸ் பண்ணியிருக்கார்.
'மாஸ்டர் மகேந்திரனை நான் மீட் பண்றப்போ என்ட்ட அவர் கண்டிப்பா சான்ஸ் கேட்பாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில..என்ன பண்ணலாம்?-னு தன்னோட அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் கிட்ட கேட்டிருக்காரு.
அப்போ அவங்க தான், 'சின்ன வயசு பவானி கேரக்டரை ஏன் மகேந்திரனுக்கு கொடுக்கக் கூடாது?'னு கேட்டிருக்காங்க.
ஆக்சுவலா அந்த கேரக்டரை ஒரு பெரிய பிரபலத்தோட பையன் பண்ண வேண்டியது. ஆனா, என்னைப்பத்தி டிஸ்கஸ் பண்ண உடன், அந்த ரோலை எனக்கு கொடுக்கலாம்-னு முடிவு பண்ணபிறகு தான் லோகேஷ் அண்ணன் என்னை மீட் பண்ணாரு.
உண்மையிலே அந்த மீட் என் லைப்-ல மறக்க முடியாத ஒன்னு. லோகேஷ் அண்ணா என்கிட்டே, 'மகேந்திரன் நீங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படம் பண்ணியிருக்கீங்க. ஆனா, இப்போ நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க-னு எல்லோரும் உங்கள கேட்டிருப்பங்கள.. உங்களுக்கு அப்போ எப்படி இருக்கும்?-னு' கேட்டார்.
நானும் என் மனசுல இருந்த வலியை முழுசும் கொட்டித் தீர்த்துட்டேன். 'என்னை யாருமே நம்ப மாட்டேங்குறாங்க-னா, 'அவன் வேஸ்ட்... அந்த பையனுக்கு மார்க்கெட் கிடையாது. அவனையெல்லாம் யார் பார்ப்பா-னு அசிங்கப்படுத்துறாங்கண்ணா'-னு சொன்னேன்.
அவர் அதுக்கு, 'சரி மகேந்திரன்... அவங்க எல்லோருக்கும் நாம ஒரு பதில் சொல்லலாமா?-னு கேட்டு, ' I'm so proud and happy to welcome you Thapalathy64 onboard'-னு சொல்லி கைக்கொடுத்தார்.
அப்படியே வெளில வந்து என் கார்-ல உட்கார்ந்து விண்டோஸ் எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிட்டு கதறி கதறி அழுதேன் பிரதர். அன்னைக்கு நான் கதறி அழுதது தான் இன்னைக்கு நீங்க பார்க்குற மாஸ்டர்.
அழிஞ்சு போன இந்த மகேந்திரனை தூசித் தட்டி மீண்டும் உங்க முன்னாடி நிக்க வச்சது லோகேஷ் அண்ணா தான்.
ஷூட்டிங் ஸ்பாட்-ல விஜய்யை சந்திச்சீங்களா? அவர் உங்களிடம் என்ன சொன்னார்?
நான் மாஸ்டர் படத்தில நடிக்கிறத லோகேஷ் அண்ணா யார்கிட்டயும் சொல்லல. விஜய் அண்ணாவுக்கே தெரியாது. அப்போ டெல்லி-ல ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்தப்போ, லோகேஷ்-ண்ணா விஜய் சார் கிட்ட போய், 'அண்ணா.. நா உங்ககிட்ட ஒரு விஷயம் ஷேர் பண்ணனும். உங்ககிட்ட கதை சொல்லும் போது, பவானியோட பிளாஷ்பேக் பத்தி சொல்லி இருந்தேன்ல, நியாபகம் இருக்கா?'-னு கேட்டிருக்கார்.
அதுக்கு விஜய் சார், 'அது செமையான போர்ஷனாச்சே டா... எப்போ அந்த ஷூட் பண்ணப் போறீங்க?-னு கேட்டிருக்கார்.
ஷூட் பத்தின விவரம்-லாம் சொல்லிட்டு, நான் ஜிம்-ல ஒர்க் அவுட் பண்ற சில போட்டோஸை தளபதிகிட்ட காட்டியிருக்கார்.
விஜய் சார் அதை பார்த்துட்டு செம ஹேப்பியாகி, 'லோகேஷ்.. .இவன் என் தம்பி லோகேஷ்... எனக்கு இவன ரொம்பப் பிடிக்கும். ஏன் இவன் போட்டோவை என்கிட்ட காட்டுறீங்க? அது சரி.. இவன் இப்படி இவ்ளோ பயங்கரமா இருக்கான்? வேற மாதிரி இருக்கானே இவன்?-னு கேட்டபோது தான், லோகேஷ் நான் நடிக்கிற விஷயத்தையே சொல்றார்.
அதுக்கு விஜய் சார், 'சூப்பர் லோகேஷ்... ஆளு வேற மாதிரி இருக்கான். கண்டிப்பா நல்லா இருக்கும். எங்க அவன்? ஷூட்டிங் எப்போ அவனுக்கு? நான் அவனை பார்க்கணும்'-னு கேட்டிருக்கார். அதுக்கப்புறம் நான் அவரை ஷூட்டில் பார்த்தேன்.
ரொம்ப வருஷம் கழிச்சு என்ன பார்க்குறதால, ரெண்டு நிமிஷம் என்னை அப்படியே கட்டிப்பிடிச்சு அவர் அன்பை வெளிப்படுத்தி, 'டேய்... நான் எங்க ஷூட்டிங்-ல இருக்கேன். எப்போ எங்க இருப்பேன்னு உனக்கு தெரியாதா? என்னை ஏன் வந்து ஒருதடவை கூட நீ பார்க்கல?'-னு கேட்டார்.
'அண்ணா... உங்களை வந்து பார்க்குறது-னா, ஏதாச்சும் சாதிச்சிட்டு தான் வந்து பார்க்கணும். அதுதான் கெத்தா இருக்கும். அப்போ தான் நீங்களும் சந்தோஷப்படுவீங்க-னு நான் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போயிட்டார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் உங்க நடிப்பை கவனிச்சாரா? என்ன சொன்னார்?
ஷிமோகாவில் என்னோட ஓப்பனிங் சீன் ஷூட் நடந்துச்சு. நான் ஜெயில்ல இருந்து வெளியே வரும் காட்சி அது. அந்த ஷூட் முடிஞ்ச பிறகு, லோகேஷ் அண்ணா விஜய் சார்-கிட்ட, 'அண்ணா இவன் ஒரு ஷாட் ஒண்ணு நடிச்சுருக்கான். இந்த படத்துலயே என்னோட பேவரைட் ஷாட் அது. நீங்க ஒரு தடவை அதை பாருங்களேன்-னு சொல்லி போட்டுக் காட்டினார்.
எடிட்டிங் லேப்டாப்பில் அதை பார்த்த விஜய் சார், "என்ன லோகேஷ்.. இப்படி இருக்கான் இவன்...எனக்கு கூட இந்த மாதிரிலாம் ஷாட் வைக்கலயே நீ?" அப்படி-னு அவர் சொன்னது என் வாழ்க்கைலயே மறக்க முடியாத ஒரு தருணம்.
மின்சார கண்ணா படத்தில் நீங்க பார்த்த விஜய்க்கும், மாஸ்டர் படத்தில் நீங்க பார்த்த விஜய்க்கும் உள்ள மாற்றம் என்ன?
பிரதர் ஒண்ணே ஒன்னு சொல்லிக்கிறேன். விஜய்-ண்ணா கலாய்க்க ஆரம்பிச்சார்-னா சந்தானத்தை தூக்கி சாப்ட்ருவார். அவரோட இந்த குணம் அப்படியே இருக்கு. முன்னாடி கூட, நடிப்பாரு, வந்து உட்காருவாரு, பேசுவாரு. இப்போ, ஷூட்டிங் ஸ்பாட்-ல யார் முகமாச்சும் சுருங்கி இருந்தாலே, கூப்பிட்டு 'என்ன உன் பிரச்சனை'னு பெர்சனலா கேட்குறதை நான் பார்க்க முடியுது.
மாஸ்டர் பார்த்துட்டு உங்களை பாராட்டிய பிரபலங்கள்?
முதல்ல எனக்கு போன் பண்ணி வாழ்த்தியது அதர்வா தான். நானும் அதர்வாவும் ரொம்ப க்ளோஸ். அதர்வாவோட உண்மையான பேர் விஜய். சினிமாவுக்காக தான் அவர் அதர்வா.
அவன் எனக்கு ஃபோன் பண்ணி, 'மஹி... என்னய்யா யோவ்.. இப்படி நடிச்சிருக்க... மிரட்டிவிட்டுட்ட'-னு பாராட்டினார்.
அப்புறம், வைபவ், அசோக் செல்வன், சாந்தனு, வெங்கட் பிரபு-னு நிறைய பேர் படம் பார்த்த்துட்டு விஷ் பண்ணாங்க.
ஆக்சுவலா, எனக்கும் வெங்கட் பிரபு சாருக்கும் ரொம்ப வருஷமா ஒரு பிரச்சனை போயிட்டிருக்கு. சென்னை-28-னு ஒரு படம் எடுத்து, எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்தீங்க. எனக்கு ஒரு வாய்ப்பு தர மாட்டேங்குறீங்க-னு கேட்டு சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன்.
ஆனா, அதுக்கு அவர் சொன்ன பதில், 'டேய்... உன் பசிக்கு தீனி போடுற கேரக்டர் அதுல இல்லடா.. என்னால, சாதாரண கேரக்டர் ரோல் உனக்கு கொடுக்க முடியல-னு சொல்லி என் வாயை அடைச்சிட்டார். ஸோ, அவர் என்னை வாழ்த்தியது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சசு.
எல்லாத்துக்கும் மேல, மாஸ்டர் சான்ஸ் கிடைச்சதுக்கு சேது-ண்ணாவுக்கு மாலை போட்டு நன்றி சொல்ல போயிருந்தேன். ஆனா, அவரோ 'நா உனக்கு பண்ணிருக்கேன் சொல்ற... ஆனா நீதான் எனக்கு பண்ணிருக்க. உன்னோட அந்த ஜுனியர் பவானி ரோல் தான், எனக்கு வெயிட்டேஜ் சேர்த்துச்சு.. நான் தான் உனக்கு நன்றி சொல்லணும்'-னு சொல்லி நான் வாங்கிட்டு வந்த மாலையை எனக்கே திருப்பி போட்டுட்டார். என் வாழ்நாளில் இந்த பாராட்டை மறக்க முடியாது.
ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நிறைய ரசிகர்கள் உங்களை பாராட்டுறாங்க. உங்களை பத்தி அதிகம் பேசுறாங்க.. இந்த ஃபீல் எப்படி இருக்கு?
உண்மையா சொல்லணும்-னா எனக்கு எல்லா ரசிகர்களையும் திட்டணும்-னு தோணுது. நல்லா திட்டணும்-னு தோணுது.
ஏன்னா... ஒரு ஏழு நாள் ஷூட்டிங்குல, 15 நிமிஷ சீன்-ல என்ன நடிக்க வச்சு, உங்கள் எல்லோர் மத்தியிலயும், லோகேஷ் அண்ணா-வால ஒரு ஆச்சர்யத்தை உருவாக்க முடிஞ்சிருக்கு-னா, நான் 5 படம் ஹீரோவா பண்ணிருக்கேன். ரெண்டரை மணி நேரம் ஸ்க்ரீன்-ல நின்னிருக்கேன். ஒவ்வொரு படத்துலயும் நாய் மாதிரி உழைச்சிருக்கேன். ஆனா, என்னை ஏன் எல்லோருக்கும் தெரியல-ங்கிற அந்த ஒரு கோபம் தான்.
என்னை எத்தனையோ பேர் Degrade பண்ணாங்க.. அப்போ-லாம் நான் சிரிச்சுக்குவேன். ஏன்னா, நான் என்னை ரொம்ப நம்பினேன். இந்த மாஸ்டர் மகேந்திரனை நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நம்பினேன். அதோட வெளிப்பாடு தான் இந்த மாஸ்டர்.
ஆனா, ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படம் பண்ணனும்-ங்கிற யதார்த்தத்தையும் நான் இப்போ புரிஞ்சிக்கிட்டேன்.
இப்போ என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க?
உங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லணும்-னு ஆசையா இருக்கு. ஆனா, சொன்னா கண்டிப்பா ரூம் போட்டு அடிப்பாங்க. ஒரு மிகப் பிரபலமான இயக்குநரோட படத்துல அடுத்து நடிக்கும் ஆவலோடு இருக்கேன். ஆனா, முறையா அறிவிப்பு வரும் வரை வெயிட் பண்ணணும் -ங்கிற ஒரே ரீஸன்-காக உங்ககிட்ட ஷேர் பண்ண முடியல..
அதேசமயம்,ஒரு தெலுகு-தமிழ் bilingual படம் ஒன்னும், PAN India படம் ஒன்னும் பண்ணிட்டு இருக்கேன். அனைத்து அறிவிப்புகளும் முறையா வெளிவரும்.
கடைசியா ஒரு கேள்வி. உங்க பேவரைட் ஜேடி-யா? பவானியா?
பவானி. ஏன்னா, பவானிக்கு தான் எப்போதும் லிமிட்டே கிடையாது. இனி என் வாழ்க்கையும் அப்படித்தான்.
வாழ்த்துகள் ப்ரோ!!